புதன், 28 ஆகஸ்ட், 2013

ஜெயாம்மாவும்,கண்ணன் கதையும்.


           இது ஒரு நட்புக்கு, நட்பான இதயத்துக்கு சமர்ப்பணம். ஒப்பனை மனிதனின் தெய்வம் எழுதியவள் கண்ணன் கதை எழுவது விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போல் ஸ்டான்ட் என்று தோன்றலாம். ஆனால் அதற்கு முன் ஜெயாம்மா.
 

சனி, 24 ஆகஸ்ட், 2013

வெளயாட்டா கொஞ்சம் தெரிஞ்சுக்குவோம்!

அமீர் கான் ,சாருக்கான் ,ஹிருத்திக் இவங்களுக்கெல்லாம் ஏன்மீசையில்லை? காத்தாடி விட்டே காசு சம்பாரிக்க முடியுமா? 
நீங்க கால் பந்தாட்ட ரசிகரா?அப்போ நீங்க சைவமா இருந்தும் பயன் இல்லை ?
ஒலிம்பிக்ல தங்க பதக்கம் தராங்களே அது நெஜமாவே தங்கமா? 

ஒ.கே .ஒண்ணுன சொல்றேன்.
               1.சீட்டுக்கட்டில் ஹார்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இருக்காது.
             
                2.காத்தாடி விடுதல் தாய்லாந்த் நாட்டில் ஒரு தொழில் முறை விளையாட்டு.
             
     
                  3.கால் பந்து தயாரிப்பதற்கு N .F .L .அதாவது நேஷனல் கால்பந்து லீக் மட்டுமே ஆண்டு தோறும் 3000 பசுவின் தோல் தேவைபடுகிறது.
                  4.உலகின் பெரும்பான்மையான பேர் கலந்து கொள்ளும் மற்றும் விரும்பி பார்க்கும் விளையாட்டாக கால் பந்து உள்ளது.
                  5.ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் தங்கப்பதக்கங்கள் பெரும் பகுதி வெள்ளி தான் கலந்திருக்கும்.
                     ஒலிம்பிக் பற்றி வேற்றொரு தகவல் தெரியுமா?ஆப்ரிக்கா,தென் அமெரிக்கா ,அண்டார்டிகா ஆகிய மூன்று கண்டங்களிலும் நடத்தப்பட்டதில்லை .
                    6.உலகம் முழுக்க 100 மில்லியன் மக்கள் வேட்டையாடும் உரிமம் பெற்றுள்ளனர்.
                    7.மேலும் ஒன்னே ஒன்னு தான் .இடது கைக்காரர்கள் விரைவாக முடிவெடுக்க வேண்டிய விளையாட்டுகளில் வலது கை காரர்களை விட கலக்குவார்களாம் .
                                            கஸ்தூரி

                         

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஞாபகம் வருதே !ஞாபகம் வருதே !


                                                 இன்று என் பழையவீட்டை பார்த்து வர விருப்பம் மேலெழும்பியது.கருக்கலில் புறப்பட்டு விட்டேன் .முன்பிருந்த இடம் நகர நெரிசலின்றி அமைதி பூசியிருக்கும் .ஆனால் அங்கும் நெருக்கடி மிகுந்த போது அமைதிவேண்டிதான் இவ்விடம் விட்டு நகர்ந்தேன்.முதுமை பிராயத்தில் இயல்பாய்  எழும் பெரு விருப்பாய்  என் இளமை காலத்தில் வாழ்ந்த இடத்தை பார்க்க வேண்டும் என சிலநாட்களாய் ஏனோ வெகு விருப்பம்.
                  வானம் வெளுப்பதற்கு முன்பே கிளம்பிவிட்டேன் .வழக்கமான சந்தில் வளைகயில் நகரின் அசுர வளர்ச்சி பயத்தை கிளப்பியது.அதோ தெரிகிறதே அந்த இடம் தானா?குழம்பியவாரேதான் உள் நுழைந்தேன் .அதோ வேப்பமரம்!!.என் மண் வீடு இருந்த இடத்தில் இன்று பெரிய காரை வீடு!!.ஏதேதோ சிந்தனையில் உலன்றவாறு நின்றுகொண்டிருக்கும்போதே என் தலையில் பலமாய் ஒரு அடி.யாரோ கட்டையால் தாக்கிஇருந்தனர் .நான்  மயங்க தொடங்கினேன்.என் காதுகளில் அவர்கள் கூக்குரல் தேய்ந்து ஒலித்தது ''பாம்பு  ,பாம்பு "          
                                                   -கஸ்தூரி      




பி.கு
        இது காமெடி போல இருக்கலாம்.ஆனா உண்மையாவே நாம் மற்ற உயிர்களிடமிருந்து இப்படி தான் வாழ்விடங்களை பறிக்கிறோம்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மாணவர்களுக்கு ஒரு சுதந்திரம்



                             எனது பள்ளி நாட்களில் வருகைப்பதிவை தவிர என் பெயர் வேறு எப்போதும் அழைக்கப்படாத நாட்களை கடந்திருக்கிறேன்.முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்கள் தான் கட்டுரை ,பேச்சு மற்றும் கவிதை போட்டியில் கலந்து கொள்ள முடியும் .நல்ல நிறமாய் இருந்தால் பள்ளி விழாக்களில் ஆடவும் ,நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.அண்ணா ரவி சார்(தமிழ் ஆசிரியர் )என் பள்ளிக்கு வரும் வரை பேக் ஸ்க்ரீன் போஸ்ட் தான் எனக்கு.
             ஆனால் இன்று அரசுப்பள்ளிகளில் அந்த நிலை மாறியுள்ளது  c .c .e 
என்கிற முறையில் மாணவர் திறன்களை மதிப்பிடு செய்கிறோம் .60 மதிப்பெண்கள் பருவத்தேர்வுக்கு  20 மதிப்பெண் வகுப்பறையில் நடக்கும்சிறுதேர்வுக்கு மற்றும் 20 மதிப்பெண்கள் மாணவர் தனித்திறமைகளை பாடப்பகுதியில் வெளிப்படுத்துவதற்கு .மாணவர்கள் அசத்துகிறார்கள் .எல்லோரும் பாராட்டப்படுகிறார்கள்.(தனியார் பள்ளிகளை பற்றி எனக்கு விரிவாகத்தெரியது .தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் )
                                         எனது வகுப்பில்  சிவாஜி பழக்கூடையில் தப்பித்த நிகழ்வை நாடகமாக நடத்தினார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள் (எட்டாம் வகுப்பிற்கு மட்டும் வரலாறும் நடத்துகிறேன்).அவர்களிடம் இருந்தகுளிர்பான கிரேடில் அமரக்கூடிய அளவில் ஒரே ஒரு குட்டி மாணவன் தான் இருந்தான் .அவனோ சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சற்று கூச்சசுபாவம் உள்ளவன் .எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது .மாணவர்களோ தங்கள் குழுவில் வெகு தீவிர ஒத்திகையில் இருந்தனர் .
                                                 அவர்கள் நாடகம் நடத்திய நாளில் அந்த குட்டி சிவாஜி ஒவரங்கசிபின் அரண்மனையை விட்டு கோபத்துடன் வெளியேறி ராம்சிங்கிடம்"ஒவ்ரங்கசிப் வழங்கிய இந்த கிலாத்தை (மொகலாய அங்கி)கிளித்தெறிவேன்  .ஆக்ரா வீதிகளில் திரியும் பிச்சைக்காரர்களுக்கு பரிசளிப்பேன் "என்று முழங்கியபோது எனக்கு சிலிர்த்து விட்டது.f .a (a ) வாழ்க!வகுப்பறை படிப்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே என்ற நிலை மாறி கற்பதற்கும் ,செயல் படுத்துவதற்கும் என்ற நிலை உருவாகி வருகிறது.நாளைய தமிழகம் கல்வியால் ,கலைகளால்   நல்லதாய் மலரும் என்னும் நம்பிக்கையோடு                                                                                                                                                                   -கஸ்தூரி 

சனி, 10 ஆகஸ்ட், 2013

மற்றுமொரு கனவுத்தொழிற்சாலை

விதுன் பார்த்த பேய்கனவு
விடாது துரத்துகிறதென்று
தேம்பிய பெப்பிக்குட்டியை
தேற்றினேன் ஒரு முத்தமிட்டு


அன்றிலிருந்து தொடங்கியது
ஒரு மாயவிளையாட்டு
கனவுகள் சமைத்து
கண்களுக்குள் ஊட்டும்படி
வேண்டிய மகளுக்காய்


விளையாட்டு ப்பூங்காவாய்
விளைந்தது முதல் கனவு
விதவிதமாய் மலர்களோடு
சுகந்தமாய் மறு கனவு


வெள்ளுடையும் விரித்த சிறகுகளுமாய்
நீலதேவதையோன்று பாடத்தொடங்குகையில்
தூங்கிப்போனோம் நானும்,பெப்பியும்



இரவெல்லாம் பாடிக்கொண்டிருந்தது
சிறகு முளைத்த சின்ன தேவதை
மற்றுமொரு கனவுத்தொழிற்சாலையாய்
எங்கள் படுக்கையறை -
                                                  -கஸ்தூரி 

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தேர்தல் நவராத்திரி !

படிக்கு படி ஏறியிறங்கும்
கொலு பொம்மைகள்
சிப்பாய் ,தளபதி,செயல்வீரன்,சீமாட்டி

எல்லாம் தலையாட்டும்
புன்னகைத்தபடி இருக்கும்

வீற்றிருக்கும் பொம்மைகள் முன்
வில்லுப்பாட்டும் நடக்கும்

பண்டிகை நாட்களில்
பவனி வரும் -பின்
வசதியாய் உறங்கிவிடும்

நாம் சுண்டல் கொறித்தபடி
வேடிக்கை பார்க்கவும்-பின்
சொந்த அலுவலில் மூழ்கிபோகவும்

வந்து விடுகிறது நமக்கும்
 ஐந்தாண்டுக்கு ஒருமுறை
தேர்தல் நவராத்திரி !  -கஸ்தூரி