ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020
புதன், 29 ஜூலை, 2020
காலத்தின் ஊஞ்சல்- வேள்பாரி
மனம் மயக்கும் ஏழிலைப்பாலை, மின்னி ஒளிரும் கார்த்திகை நட்சத்திரம், அசுமனா, ஆலா என நிகழ்வு உலகிற்கும், பறம்புலகிற்கும் இடையே சோமப்பூண்டு அருந்திய தாக்கத்தில் வாழ்ந்த, வாசித்த அந்த நாட்களின் நீட்சி வினையாய் இன்றும் பல நிகழ்வுகளின் வேள்பாரியை பொருத்திப் பார்க்கிறது மனம்.
அமெரிக்கா ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பு நெருப்பால் கனன்று கொண்டிருக்கும் இந்நேரம் கொற்றவைத்திருவிழாவை வாசித்த அந்த இரவு நினைவுக்கு வருகிறது. அன்றெல்லாம் சீஃப் சியாட்டல் வேள்பாரியை சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் இனத்துக்கு எந்த கனியை தேவ வாக்கு விலங்கு எடுத்துக் கொடுத்திருக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் அலைக்கழித்தபடி இருந்தன.
யாரிந்த சீஃப் சியாட்டல்? மூவேந்தர்களால் சிதைந்து போன எண்ணற்ற இனக்குழுக்கள் பற்றி நாம் வாசித்தோம் அல்லவா, அதே போல அமெரிக்கா எனும் பெரும் கண்டத்தில் அதன் ஆதிகுடிகள் பலவற்றையும் அடித்து நொறுக்கி அடிமைப்படுத்தியது அதிகார பலம் படைத்த வெள்ளை இனம். அவர்கள் நிலத்தில் அவர்களை அடிமையாய் போன அவலம்.
சியாட்டல் தந்தை வழி ஸ்க்வாமிஸ் இனம், தாய் டுவாமிஸ் இனம். பாரியின் மூதாய் கொடிக்குலமும், வேளிர் குலமும் போல. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பின பழங்குடிகளை நசுக்கி முன்னேறிக் கொண்டிருந்த கால கட்டத்தில் சியாட்டல் தனது வடகிழக்கு நிலப்பகுதியை ஒப்படைத்துவிடுமாறு மிரட்டிய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் பியர்ஸ்க்கு எழுதிய திறந்த மடல் கொறறவைக்கூத்தில் திரையருக்குப்பின் வரும் இரவில் பாடத் தகுதியானது.
அந்த கடிதத்துக்கு இப்படித்தலைப்கிட்டிருப்பார் சியாட்டல் “ வானத்தை எப்படி வாங்கவோ, விற்கவோ முடியும்?” அந்த கடிதம் இப்படி நீளும். எங்களுக்கு பூமியை விற்பதும் அதுபோல விந்தையாகத் தான் இருக்கிறது. பூமியால் நாம் வாழ்கிறோம், பசியாறுகிறோம் அதற்கு நாம் தானே கடமைப்பட்டிருக்கிறோம்! அது எப்படி நம் சொத்தாகும்? இரைந்தோடும் இந்த நதியில் என் தாத்தனின் குரல் கேட்கிறது. உயர்ந்து நிற்கும் இம்மலைகளில் என் தந்தையின் உரு காட்சிகொள்கிறது. இம்மலர்கள் என் சகோதர, சகோதரிகள்.
நீங்கள் விரட்டினீர்கள் நாங்கள் ஓடினோம். ஒழிந்தோம். இனி ஓட இடமில்லை . கடல் வந்துவிட்டது. இனி எங்கள் நிலங்களை உங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த மண்ணை மதிக்க எம் குழந்தைகளுக்கு கற்றுத்தந்திருக்கிறோம். உங்கள் குழந்தைகளையும் எம் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொடுங்கள். எம் நிலத்தில் எச்சில் துப்ப அனுமதிக்காதீர்கள் என அவரது கடைசி ஆசையிலும் மண்ணள்ளிப்போட்டு , சொந்த மண்ணில் கழுத்து நெறிபட்டு இறந்து போன ஜியார்ஜ் ஃபிளாட் இன்னொரு காலம்பன் தானே! தன் நகர் ஒன்றுக்கு சியாடல் என்ற பெயர் வைத்ததோடு முடித்துவிட்டது அமேரிக்கா.
உலகெங்கும் ஈழம் தொடங்கி இப்படித்தான் ஆதிகுடிகள் மேட்டுக்குடிகளால் நசுக்கப்படுகிறார்கள். ஆள்வோரும் இப்படித்தான் புத்தனை வணங்கிவிட்டு போதிமரங்களை தகர்க்கும் , பைபிளோடு காட்சி தரும் ட்ரம்பாய் இருக்கிறார்கள். அமேரிக்காவில் தான் இப்படி என்றால் பறம்பிற்கு அருகே இருந்த சேரநாட்டில் மற்றொரு அதிர்ச்சி செய்தி. அன்னாசிக்குள் குண்டை வைத்து கர்ப்பிணி யானையை கொன்றிருக்கிறது ஒரு மனிதமிருகம் என சொல்லமாட்டேன். கர்ப்பிணி மானைக் கொல்லாத புலி பற்றிய செய்தியை நான் வாசித்திருக்கிறேன். எது அஃறிணை என ஐயம் கிளை விடுகிறது.
வேள்பாரியில் மூன்று யானைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மூலிகைக்கு வசப்பட்டு பறம்பு மகள் பின் சென்றது ஒரு யானை, பாண்டியநாட்டில் கொல்லப்பட்டு தங்கள் சுலநலனுக்காக எந்த கொலைபாதகத்துக்கும் அஞ்சாத சர்வாதிகாரத்தை படம் பிடிக்கிறது மற்றொரு யானை. களம் காணாமலே நெஞ்சை வெல்கிறது கடைசியாக பறம்பின் யானை. இப்படியாக வேள்பாரி நாவல் ஒரு ஊஞ்சலென என் நிகழ்கால உலகிற்கும், பாரியின் பறம்புக்கும் இடையே எனை ஆட்டிவிளையாடுகிறது.
பி,கு: பறம்பு வாசகர் வட்டம் நடத்தி கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கட்டுரை இது.
புதன், 24 ஜூன், 2020
கண்ணதாசன்- காலக்கணிதம்!
ஒரு வார்த்தை அது யாரால் சொல்லப்பட்டது என்பதைப் பொருத்து அர்த்தம் கொள்கிறது இல்லையா
அதுமனப்பாடப்பகுதி எனஅறியுமுன்னே எனக்கு மனனமாகத்தொடங்கிய முதல் பாடம் காலக்கணிதம். அர்த்தமுள்ள இந்து மதத்தைப் படித்துவிட்டு இறைமறுப்பாளரானRavi Annaravi ரவிசாரிடம் கருத்து மோதுவேன். சற்றும் அலட்டாமல் வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் வாசித்து விட்டாயா?என கேட்டுத் திகைக்க வைப்பார் அவர். என்னமனுசன்டா இந்த கண்ணதாசன்? இவரை நம்பி இப்படி போருக்குக் கிளம்பினோமே எனவெட்கிப்போன நாளில் அதற்கு "மாற்றம் எனது மானிடத் தத்துவம்;மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!" என நான்கே வரியில் கண்ணதாசன் இதே பாடலில் விளக்கம் தருவார்.இதெல்லாம் ஒரு பிழைப்பாஎனக் கேட்பீர்களா"கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;" என உங்களை மேலும் பதற வைப்பார்."நானே தொடக்கம்; நானே முடிவு;நானுரப் பதுதான் நாட்டின் சட்டம்!" என அவர் அந்த கவிதையைமுடிக்கையில் அந்த ஞானச் செருக்கு என்னை வியப்பின் உச்சியில் நிறுத்தியது. சரியாகச்சொல்வதென்றால் இந்த கவிதை ஒருகதைவடிவெனில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல் திரைக்கதை எனலாம். அந்தமுழுப்பாடலையும் பின்னூட்டத்தில் தருகிறேன். விருப்பம் உள்ளோர் படித்துக்கொள்க!உள்ளம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும் என்ற வரிகள் இன்று வாசித்தாலும் கமழ்கிறதில்லை!நிறை கேட்பாள் "ஐந்து, எட்டு என்றெல்லாம் எப்படித்தான் அம்மா அந்த காலத்தில் இதுபோலச் சிறிய வீடுகளில் குழந்தைகள் இருந்தார்கள்? கண்ணதாசனிடம் கடன் வாங்கித் தான் பதில் தருவேன் "மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம், வழியிருந்தால் கடுகுக்குள்ளேமலையைக் காணலாம்". எம்.எஸ்.வி மெட்டமைக்ககண்ணதாசன் காற்றின் தீராத பக்கங்களில்பிரமிளின் பறவையைப்போல்சிறகசைத்து இறகுதிர்த்துக்கொண்டேயிருக்கிறார் . அந்த பாடல்கள் ஒரு வேளை P.B.ஸ்ரீநிவாஸால் பாடப்பட்டிருந்தால் இது கண்ணதாசன் பாஷையில் சொன்னால்சர்க்கரைப்பந்தலில் பொழிந்திட்ட தேன் மாரி.காலையில் நண்பர்Prakash Shankar இற்றை ஒன்றில்அத்தியாவசிப்பணி ,அநாவசியப்பணி என ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை ஐந்து பணிகளை முறையே பட்டியலிட்டதைப் பகிர்ந்துநாயமரே என்றிருந்தார். அதில்அநாவசியப்பணியில் முதலிடம் Artist. அதாவது கலைஞன்! கண்ணதாசனின் பிறந்த நாளில் இப்படியொரு செய்தியா எனநொந்து வந்தது. வாழ்வின் விளிம்பு நிலை எப்படிக் கடந்தீர்கள் என்ற வினாவுக்கு,கைப்பற்றிக் கரையேற்றியதாகசொர்ணலதாவையோ , இளையராஜாவையோ, வடிவேலுவையோ காட்டுபவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். என்வரையில் என் அம்மா தன்கடைசிக் காலங்களில்ஆஸ்துமாவால் அவதிப்பட்டு இரவெல்லாம் இருமிய படியிருப்பார்.ரெயின் போ பண்பலையில்தேன்கிண்ணம் தொடங்கும்.பதினோரு மணிக்கு உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதுஎன சீர்காழி பாடத்தொடங்குகையில்நகைமுரணாய் பைய என் அம்மா தூங்கத்தொடங்குவார். இதோமகிக்குக்கூட பிடித்துத்தான் இருக்கிறது கண்ணதாசனின்கடைசிப் பாடலான கண்ணே கலைமானே!உனக்கே உயிரானேன்... எந்நாளும்எனை நீ மறவாதே என்ற வரிகளை நான் பாடும் போதெல்லாம்,நெற்றியில் முத்தமிட்டு அந்த பாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறாள் மகி!ஆம் கவியரசே நீங்கள் புவியில்புகழுடைத் தெய்வம் தான்!
திங்கள், 8 ஜூன், 2020
தேவையா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு?
தேர்வு என்பது அந்த ஒரு ஆண்டில் மாணவர் என்ன கற்றார்? எவ்வளவு ஆழமாக கற்றிருக்கிறார்? ஆசிரியர் தன் கற்றல் விளைவுகளை (LEARNING OUTCOMES) எவ்வளவில் அடைந்திருக்கிறார் என்பதை அளவிடும் கருவி என ஆசிரியர்ப் பயிற்சியில் படித்துவிட்டு ரொம்ப கறாரான ஆபிசராக வேலைக்கு சேர்ந்த புதிதில் பல மாணவர்களை ஃபெயிலாக்கியிருக்கிறேன். "எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?" நூலைப்படிக்கும் வரை.
அதன் பின் இந்த தேர்வு முறைகள், இதனை கையில் எடுத்து என்னால் மூன்று வருடம் தொடர்ந்து ஆறாவதில் பெயிலாக்கப்பட்ட அந்த மாணவன், இன்று கொத்தனாராக இருக்கும் அவர் என்னை கடக்கும் போதெல்லாம் வைக்கும் வணக்கம் என அந்த நூல் தந்த குற்ற உணர்வும், தரிசனமும் தான் ஆசிரியர் பணி கற்பித்தல் மட்டுமே சார்ந்ததன்று என செவுடில் அறைந்து ஆயிஷா நடராசன், மாடசாமி அய்யா, டோட்டோ சான் என சன்னல்களை திறந்து வைத்தது. கிடக்கட்டும்... எதுக்கு இப்போ அதெல்லாம்? சிம்பிள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஒரு ஆண்டு ரத்து செய்யுங்கள் என்ற எனது பதிவைப்பார்த்துவிட்டு, படித்ததெல்லாம் மறந்துவிடாதா, இப்படி இழுத்தடிப்பதற்கு பதில் எழுதிட்டி தான் போகட்டுமே என்கிறார்கள் நட்புவட்டத்தில் சிலர். தேர்வு அத்தனை இன்றியமையாததில்லை என்பதற்கான விளக்கமாக தான் மேலே சொன்னது.
இங்கு நோய் கிளைவிடத் தொடங்கியபோது தப்ளிக் மாநாட்டுக்கு சென்றுவந்தோர் என பீலா மேடம் தினமும் தன் புள்ளிவிபரத்தில் குறிப்பிட்டார். ஆனால் இன்று எங்கள் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பலர் குறிப்பிடத் தகுந்த அளவில் சென்னையில் இருந்து சொந்த ஊர் வந்தவர்கள். அதை ஏன் குறிப்பிடுவதில்லை. ஏன்னென்றால் தொற்று இப்படித்தான் பரவுகிறது என வெளிப்படையாக கூறிவிட்டு பத்தாம் வகுப்புத்தேர்வு நடத்த முடியாதே.
ஒரு கிராமத்து உயர்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்கள் அதை சுற்றியிள்ள குறைந்தபட்சம் ஐந்து கிராமத்தில் இருந்து வருகிறார்கள். அரசு அனுப்பும் ஒரு வேன் இந்த ஐந்து கிராம மாணவர்களை அழைத்தவருகிறது என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு மாணவர் நல்ல ஆரோக்கியமானவர், ஆனால் கொரோனா கேரியர் என வைத்துக்கொள்வோம். அவர் வேனில் ஏறிவிடுவார். குறைந்தபட்சம் இருபதில் இருந்து நாற்பது பேரோடு பயணிப்பார். தேர்வறை வருவார். தெர்மல் ஸ்கேன் செய்யப்படுவார். பத்து பேர் உள்ள அறையில் தேர்வு எழுதுவார். அவர்கள் அவரோடு ஒரே பேருந்தில் பணியத்தவர்களாகவும் இருக்கலாம், அன்றியும் இருக்கலாம். மூன்றாம் பாடம் தேர்வெழுதும் போது அவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கினால் மற்ற மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு?
அந்த மாணவர் தன் பள்ளியையும், தன் ஆசிரியரையும் நம்பி மட்டுமே தேர்வெழுத வருகிறார். எல்லா மாணவர்களும் அப்படித்தான். ஏற்கனவே பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வை எண்பதாயிரம் மாணவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அவர்கள் நிலை என்ன? இப்போது இவர்களில் பெரும்பாலானோர் புறக்கணித்தாலும் மீதி இருப்பவர்களுக்கு தேர்வு நடத்துவார்கள் எனில் புறக்கணித்தோரின் எதிர்காலம் என்ன?
ஒன்று மட்டும் புரிகிறது. கல்வி மனிதத்தையும், தெளிந்தாய்தலையும் வளர்க்க வேண்டும் இனிமேலாவது. இன்றேல் இப்படியான அறிவுஜீவிகளிடம் தான் நம் பிள்ளைகள் எதிர்காலம் ஊசலாடும்
#Cancel_board_exams
சனி, 6 ஜூன், 2020
பொன் மகள் வந்தாள்-திரை அனுபவம்
பாரதி கண்ட புதுமை பெண்! அவரைத் தான் நம் சமூகம் உச்சி முகர்ந்து வாடி ராசாத்தி என சிவப்புக்கம்பளம் வரவேற்கும் ஏதென்றால் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையில் தயக்கம் எதும் இல்லை நமக்கு!
நம் வேரடியை அசைத்துப் பார்ப்பது உண்மையில் பெரியார் கண்ட புதுமைப் பெண்கள் தான் இல்லையா! பின்னே எப்படி நடக்கணும், எப்படி பார்க்கணும் என்றெல்லாம் வகுப்பெடுக்காமல், இந்த கர்ப்பப்பை தான் உனக்கான தடை, வேண்டாம் னா தூக்கி எறி என்றெல்லாம் அவர் சொன்னால் நமக்கு பதறிடாது!
கோர்ட் சீனில் செருப்பை எறியும் காட்சியில் ஜோவின் எதிர்வினை பெரியாரின் நகல். இனி காட்சிக்கு காட்சி தீ பறக்கும், அனலடிக்கும் என்றெதிர் பார்த்தால், அந்த காட்சியில் இருந்த நிதானம் படம் முழுக்க பிரதானம்.
டீக்கடைக்காரரையும், வாட்ச்மேனையும் தவிர ஸ்க்ரீன் தெரியும் தலை அனைத்தும் பெருந்தலை! ஆனால் கதாபாத்திரம் அவர்களுக்கு நியாயம் செய்ததா? பார்த்திபனைத் தவிற பிற கதாபாத்திரங்களுக்கு இவ்வளவு ஸ்டார் காஸ்ட் இந்த திரைக்கதைக்கு தேவைப்படவில்லை. வினோதினி போல நல்ல துணை நடிகர்கள் படத்தை அடுத்த இடத்துக்கு கொண்டு போயிருப்பார்கள். இவர்களை டீசரில் பார்த்து ரசிகர் வேறு எதிர்பார்த்து ஏமாற வழிசெய்கிறது. இந்த குறையை தவிர திரைக்கதையில் குறையில்லை.
பல்வேறு வகையில் காதலையே சொல்லி கதறிவிட்ட தமிழ் சினிமா இது போலும் சமூகத்துக்குத் தேவையான மையக்கருத்தையும் விதவிதமாகத்தான் எடுக்கட்டுமே! இந்த படத்திலும் ஒரு காதல் இருக்கிறது. அது காட்டப்படவில்லை. இரு நிகழ்வாக சொல்லிகடக்கப்டுகிறது.
படத்தை இன்னும் நெருப்பாய் எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி அவரவர்க்கு நிகழும் கொடுமைகளை அவரவர் பாணியில் தானே கையாள முடியும்?
ஜோ வெண்பாவாக வருகிறார். ஆஷிஃபா, நந்தினிக்கு கண்ணீர் விடுகையில் வெண்பா, ஏஞ்சலுக்கும் சேர்த்தே அழுகிறார். பதறுகிறார். வினா எழுப்புகிறார். வாதாடுகிறார்.
ஜோதிகாவின் பாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன . அதுவும் “முயற்சி பண்ணி தோத்துட்டேன்னு சொல்ல இது விளையாட்டில்ல, ஜஸ்டிஸ்” எனும் வசனம் படத்தின் ஹைலைட்!
பார்த்திபன் வழக்கம் போல தனது இடத்தை வித்தியாசமாக தக்கவைத்துக் கொள்கிறார். வினோதினியும்.
இந்தியக்குழந்தைகள் நான்கில் ஒருவர் குடும்ப உறவுகளாலோ, நட்புகளாலோ பாலியல் ரீதியாக சீண்டப்படுகிறார் என்று ஒரு புள்ளிவிவரம் படித்த நினைவு. படத்தில் சில வசதிபடைத்த பெற்றோர் தங்களில் பிள்ளைகளை வளர்க்க துப்பில்லாமல் கௌரவத்தை மட்டும் காப்பாற்றிக்கொள்ள படும் பாட்டையும், பணத்தை வாரியிறைப்பதையும், பாதகங்கள் செய்வதையும் சுற்றிவருகிறது. தியாகராஜன் எப்போதும் இப்படித்தான் விளக்கெண்ணையில் வெண்டைக்காயை ஊறவைத்தது போல் நடிப்பாரா!! இவருக்கு பதில் ஜெயப்பிரகாஷ் நல்லாபண்ணிருப்பாரோ!
பாலுமகேந்திராவுக்கு பின் ஊட்டியை வளைத்து வளைத்து காட்டியிருக்கிறார்கள்! அவ்ளோ பொழிவு, அவ்ளோ அழகு! இசை ஊட்டி போல குளுமையா இருக்கு. விவேக் வா செல்லம் பாடலில் ஸ்கோர் செய்கிறார். எல்லோர்க்கும் ஒரே குறைதான். சாட்சியங்கள் இல்லாமல் நீதிபதி எப்படி தீர்ப்பு வழங்கலாம் என்பது தான். சாட்சியைவிட மக்களின் உணர்வே முக்கியம் என்கிற அயோத்தி தீர்ப்பு மேற்கோளாக கொள்ளலாமே!
பெண் குழந்தை பெற்றோர், பெண்கள் விழிப்புணர்வுக்காக இந்த படத்தை பாருங்கள். ஆண் குழந்தைகளை பெற்றோர், ஆண்கள் படத்தின் இறுதி வரிவரை கட்டாயம் பாருங்கள்! ஆண் குழந்தைகளுக்கு சக உயிரான பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என கற்பிக்க வேண்டிய காலமிது. இனி ஆண் தேவதைகளுக்கான காலம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)