வேள்பாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேள்பாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2020

காலத்தின் ஊஞ்சல்- வேள்பாரி

மனம் மயக்கும் ஏழிலைப்பாலை, மின்னி ஒளிரும் கார்த்திகை நட்சத்திரம், அசுமனா, ஆலா என நிகழ்வு உலகிற்கும், பறம்புலகிற்கும் இடையே சோமப்பூண்டு அருந்திய தாக்கத்தில் வாழ்ந்த, வாசித்த அந்த நாட்களின் நீட்சி வினையாய் இன்றும் பல நிகழ்வுகளின் வேள்பாரியை பொருத்திப் பார்க்கிறது மனம்.
அமெரிக்கா ஜார்ஜ் ஃபிளாயிட் என்ற கருப்பு நெருப்பால்  கனன்று கொண்டிருக்கும் இந்நேரம் கொற்றவைத்திருவிழாவை  வாசித்த அந்த இரவு நினைவுக்கு வருகிறது. அன்றெல்லாம் சீஃப் சியாட்டல் வேள்பாரியை சந்தித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் இனத்துக்கு எந்த கனியை தேவ வாக்கு விலங்கு எடுத்துக் கொடுத்திருக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் அலைக்கழித்தபடி இருந்தன.
யாரிந்த சீஃப் சியாட்டல்? மூவேந்தர்களால் சிதைந்து போன எண்ணற்ற இனக்குழுக்கள் பற்றி நாம் வாசித்தோம் அல்லவா, அதே போல அமெரிக்கா எனும் பெரும் கண்டத்தில் அதன் ஆதிகுடிகள் பலவற்றையும் அடித்து நொறுக்கி அடிமைப்படுத்தியது அதிகார பலம் படைத்த வெள்ளை இனம். அவர்கள் நிலத்தில் அவர்களை அடிமையாய் போன அவலம். 
சியாட்டல் தந்தை வழி ஸ்க்வாமிஸ் இனம், தாய் டுவாமிஸ் இனம். பாரியின் மூதாய்  கொடிக்குலமும்,  வேளிர் குலமும் போல. வெள்ளை இனத்தவர்கள் கறுப்பின பழங்குடிகளை நசுக்கி முன்னேறிக் கொண்டிருந்த கால கட்டத்தில் சியாட்டல் தனது வடகிழக்கு நிலப்பகுதியை ஒப்படைத்துவிடுமாறு மிரட்டிய அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் பியர்ஸ்க்கு எழுதிய திறந்த மடல் கொறறவைக்கூத்தில் திரையருக்குப்பின் வரும் இரவில் பாடத் தகுதியானது.
அந்த கடிதத்துக்கு இப்படித்தலைப்கிட்டிருப்பார் சியாட்டல் “ வானத்தை எப்படி வாங்கவோ, விற்கவோ முடியும்?” அந்த கடிதம் இப்படி நீளும். எங்களுக்கு பூமியை விற்பதும் அதுபோல விந்தையாகத் தான் இருக்கிறது. பூமியால் நாம் வாழ்கிறோம், பசியாறுகிறோம் அதற்கு நாம் தானே கடமைப்பட்டிருக்கிறோம்!  அது எப்படி நம் சொத்தாகும்? இரைந்தோடும் இந்த நதியில் என் தாத்தனின் குரல் கேட்கிறது. உயர்ந்து நிற்கும் இம்மலைகளில் என் தந்தையின் உரு காட்சிகொள்கிறது. இம்மலர்கள் என் சகோதர, சகோதரிகள். 
நீங்கள் விரட்டினீர்கள் நாங்கள் ஓடினோம். ஒழிந்தோம். இனி ஓட இடமில்லை . கடல் வந்துவிட்டது. இனி எங்கள் நிலங்களை உங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த மண்ணை மதிக்க எம் குழந்தைகளுக்கு கற்றுத்தந்திருக்கிறோம். உங்கள் குழந்தைகளையும் எம் நிலத்தை மதிக்கக் கற்றுக்கொடுங்கள். எம் நிலத்தில் எச்சில் துப்ப அனுமதிக்காதீர்கள் என அவரது கடைசி ஆசையிலும் மண்ணள்ளிப்போட்டு , சொந்த மண்ணில் கழுத்து நெறிபட்டு இறந்து போன ஜியார்ஜ் ஃபிளாட் இன்னொரு காலம்பன் தானே! தன் நகர் ஒன்றுக்கு சியாடல் என்ற பெயர் வைத்ததோடு முடித்துவிட்டது அமேரிக்கா. 
உலகெங்கும் ஈழம் தொடங்கி  இப்படித்தான் ஆதிகுடிகள் மேட்டுக்குடிகளால் நசுக்கப்படுகிறார்கள். ஆள்வோரும் இப்படித்தான் புத்தனை வணங்கிவிட்டு போதிமரங்களை தகர்க்கும் , பைபிளோடு காட்சி தரும் ட்ரம்பாய் இருக்கிறார்கள். அமேரிக்காவில் தான் இப்படி என்றால் பறம்பிற்கு அருகே இருந்த சேரநாட்டில் மற்றொரு அதிர்ச்சி செய்தி. அன்னாசிக்குள் குண்டை வைத்து கர்ப்பிணி யானையை கொன்றிருக்கிறது ஒரு மனிதமிருகம் என சொல்லமாட்டேன். கர்ப்பிணி மானைக் கொல்லாத புலி பற்றிய செய்தியை நான் வாசித்திருக்கிறேன். எது அஃறிணை என ஐயம் கிளை விடுகிறது.
வேள்பாரியில் மூன்று யானைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மூலிகைக்கு வசப்பட்டு பறம்பு மகள் பின் சென்றது ஒரு யானை, பாண்டியநாட்டில் கொல்லப்பட்டு தங்கள் சுலநலனுக்காக எந்த கொலைபாதகத்துக்கும் அஞ்சாத சர்வாதிகாரத்தை படம் பிடிக்கிறது மற்றொரு யானை. களம் காணாமலே நெஞ்சை வெல்கிறது கடைசியாக பறம்பின் யானை. இப்படியாக வேள்பாரி நாவல் ஒரு ஊஞ்சலென என் நிகழ்கால உலகிற்கும், பாரியின் பறம்புக்கும் இடையே எனை ஆட்டிவிளையாடுகிறது.

பி,கு: பறம்பு வாசகர் வட்டம் நடத்தி கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற கட்டுரை இது.

ஞாயிறு, 17 மே, 2020

வேள்பாரி - கற்றதும் பெற்றதும்

 எல்லோர்க்கும் பொதுவான மழை தான். ஆனால் நனைத்தல் அவரவர்கானது இல்லையா! வாசித்த எல்லோரும் உச்சி நுகர்ந்த வேள்பாரியை என் சிற்றறிவின் எல்லையில் நின்று வாசித்த அனுபவத்தை பகிர்த்தல் பொருட்டு என் இயல்பில் அல்லாத சற்றே நீளமான இந்த பதிவு. 

வேள்பாரி பல துறையில் ஆய்வு மேற்கொள்ள வழிவகுக்கும் அறிவுக்களஞ்சியம்.  சங்கப்பாடல்கள் வாசிப்பால் அது வசப்பட்டதென முன்னுரையில் ஆசிரியர் தெளிவாகவே குறிப்பிடுகிறார். எதை சொல்கிறார் என்பதைவிட யார் சொல்கிறார் என்பதில் கூடுகிறது சொல்லின் பொருள்.
 ஆசிரியர் வழி நின்று நோக்குங்கால் மன்னராட்சிக்கு எதிரான கலக்காரனின் குரலாக, கம்யூனிச ரேகை நூலெல்லாம் பரந்து விரிகிறது. வேப்பம்பூ யாருக்கானது தெரியுமா என்ற வினவும் கபிலரிடம், அது சிற்றெறும்புக்கானது என விடை தந்து மூவேந்தரின் சக்கரத்தில் முதல் அச்சை அசைக்கிறான் நீலன். அதன் தொடர்ச்சியாக வேப்பம்பூவை வயல் நண்டின் கண்களோடு வரும் உவமை ஐங்குறுநூறு களவன் பத்து பாடலின் சாரம் என்பது ஒரு கூடுதல் தகவல்.

நெருப்பில் சுடப்பட்ட உணவு ஆண் உணவென்றும், அவசரத்தின் குறியீடென்றும், நீரில் வெந்தவை பெண் உணவென்றும், பக்குப்பட்டதென்றும் ஓரிடத்தில் கபிலர் குறிப்பிடுகிறார். தோப்புகளில் காடைகறி சுட்ட சித்தப்பாக்கள் முதல் இன்று பார்பிக்யூ பார்ட்டி வரை ஆண்கள் சுட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். 

 நூல் ஆசிரியர் கல்வெட்டுகள் பற்றிய உரை ஒன்றில் இதுவரை தமிழகத்தில் கிடைத்ததிலேயே மிகப்பழமையான கல்வெட்டொன்றில் இடம் பெற்ற பெயர் அந்துவன் என குறிப்பிட்டார். வரலாற்றில் தமிழ் எழுத்துருவின் தொன்மையைக்குறிக்கும் அந்த பெயரை  அவர் தலைமை கனியனுக்கு சூட்டியது எத்தனை ஆழமான சிந்தனை இல்லையா!
நீலமும் மஞ்சளும் கலந்த முயல் காது வடிவ முருகன் காட்டிய ஏழிலைப்பாலை ஈர்த்த அளவு ஏன் வள்ளி வியந்து அழைத்துக்காட்டிய  நரந்தம் புல் பலரை ஈர்க்கவில்லை! அதைபற்றிய விவரிப்புகள் சற்று குறைச்சல் என்பதாலோ! உண்மையில் நம்மில் பலரும் நரந்தம்புல்லை முகர்ந்திருக்கிறோம். அவை இப்போது லெமன் கிராஸ்(Lemon grass) என்ற பெயருடன் எழுமிச்சை சேர்ப்பதாக சொல்லப்படும் எல்லா நறுமணப்பொருட்களோடும் சேர்க்கப்படுகிறது. இங்கே சித்தன்னவாசல் அருகே கொஞ்சம் இருக்கிறது. கேரளாவில் நிறைய இடத்தில் காணக்கிணைக்கிறது.  புல்லைப்பறித்து கசக்கி முகர்ந்தால் எழுமிச்சை மணம் வரும். புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி சின்ன சின்ன குறிப்புகளால் அசரவைக்கும் நூல் எங்கும் என் எண்ணம் நிலைகுத்தி நின்றது இரண்டு கருத்துகளில் தான். ஒன்று கற்றல் மற்றொன்று பெண்ணியம்.
 பொதுவாக மொழி கற்றவர்களுக்கு கணிதமும், கணிதம் கற்றவர்களுக்கு மொழியும் கைவருவதில்லை. அது ஏன் என்கிற நுட்பம் இந்த நூலில் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது. கபிலரின் அறிவின் ஆழம் பற்றி யாரும் விளக்கவே தேவையில்லை. ஆனால் அவருக்கு வானியல் கற்றுதர திசைவேழரால் முடியவில்லை. ஏனென்றால் அவரது கற்பித்தல் தெரிதலுக்கானதாய் இருக்கிறது. நிலப்பகுதியில் இரண்டு ஆசிரியர்கள் காட்டப்படுகிறார்கள். எந்த வயது மாணவனையும் கோல் கொண்டு தாக்கும், தனக்கு மற்றொருவர் இணையில்லை என கருதும், இதற்கு மேல் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை, முன்பு கற்றதையே பயிற்சி செய்தால் போதும் என நம்பும், மாணாக்கரின் வினாக்கள் இடையூறு எனக்கருதும் திசைவேழர். 
வினா கேட்கும் மாணவியை ஊக்குவித்து ஆனால் இதுதான் தான் கற்றது என மலைக்கும் கபிலர். 
அவரவர்க்கு தேவையான கல்வி மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகிறது. 
மாறாக பறம்பில் எல்லோர்க்கும் சமமான கல்வியும், பயிற்சி வாய்ப்பும் கிடைக்கிறது. அதுவும் நேரடிக்கற்றல் அனுபவம். தேக்கன் அலவனை கண் திறந்து வழிபட அனுமதிக்கிறார். மாணவன் கேள்வியை ஊக்குவிக்கிறார். நீங்கள் சொன்னதை நான் நம்பினேன் ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என சாடும் அலவனை அப்படித்தான் போ என விரட்டாமல், அவன் சொன்ன கருத்தை சோதிக்கிறார். 
மற்றோரு ஆசானாக நாம் பாரியை பார்க்க முடிகிறது. எங்கள் கெமிஸ்ட்ரி வாத்தியார் + எண்ணையும், -எண்ணையும் கூட்டுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்வார் + என்பது பணக்கார குடும்பம், - என்பது ஏழைக்குடும்பம். இரண்டு + அல்லது இரண்டு- காதலித்தால் பிரச்சனை வருவதில்லை அது + ஆகிறது மாறினால் மைனஸ் தான் என நகைசுவையாய் கூறினார். பணம் பற்றிய சர்ச்சை விடுத்து அந்த காதல் பார்முலா எங்கள் வகுப்பில் யாருக்குமே மறக்கவில்லை. அதே போல் திசைவேழர் தலையால் தண்ணீர் குடித்தும் கபிலருக்கு விளங்கவைக்க முடியாத கார்த்திகை கூட்டத்தை ஒரு காதல் கதையால் மனதில் பதியவைப்பார் பாரி. அறுபதும் தமிழ் ஆண்டுகளா என்பதில் என் கருத்து முரண்பட்டாலும், ஆறு(நதி), நேரக்கணக்கு பலவற்றில் ஆறின் அச்சை உணர்ந்த நொடி நம் வாழ்வில் கடக்கும் ஒவ்வொரு ஆறையும் உற்று நோக்கவைக்கிறது. இன்னும் வேள்பாரியில் கற்றல் கற்பித்தலை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பதிவின் நீளம் கருதி அடுத்து பெண்ணியம். 
நாகரிகம் தழைத்த மூவேந்தர் குடியில் பெண் சந்தையில் விற்கப்படுகிறாள். செல்வாக்கு மிகுந்த குடும்பப்பெண்களும் திருமண ஒப்பந்தத்தில் பண்டமாக விற்கப்படுகிறார்கள். அவர்கள்  எந்த ஆணையும் நம்ப மறுக்கிறார்கள். தங்கள் குலப்பெண்களுக்கு அணக்கர்களை பல்லக்கு தூக்க அமர்த்தப்படுகிறார்கள். பெண்களில் கற்பு கற்கோட்டைக்குள் பாதுகாக்கப்படுகிறது. ஆணோ தன் மகள் திருமணக்கொண்டாட்டத்தில் இருமுகப்பறை நடனத்தை தனியே கண்டுகளிக்கிறார். பாண்டிய வேந்தனுக்கு பல கவலைக்களுக்கு நடுவே ஒரு கவலை அவன் விலை கொடுத்து வாங்கிய கிளாசரினா உண்மையில் யவண மங்கைதானா, அத்தனை தொலைவில் அமர்ந்திருக்கும் அவளது கவிழும் இமைகளை தன் எதிரே அமர்ந்திருந்ந சம்பந்தி எப்படி பார்த்திருக்க முடியும் என்பதெல்லாம் அதில் சில. 
பறம்பு மலையிலோ பெண் மதிக்கப்படுகிறாள். ஏனென்றால் அவள் உண்மையாக அவளுக்காக நேசிக்கப்படுகிறாள். குலநாகினியாக போற்றப்படுகிறாள். சோமபானத்தில் இருந்து எல்லைப்பாதுகாப்பு வரை சகல விசயங்களிலும் சமமாக நடத்தப்படுகிறாள். திரு ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் வடிவேலு ஒரு வசனம் பேசுவார் “ எங்க இனத்தில் கற்பழிப்பு என்ற ஒன்றே இல்லையடா ” நாகரிகம் என்ற பெயரில் இயற்கைக்கும் நமக்குமான பந்தம் மட்டுமா அறுப்பட்டுக்கிடக்கிறது?  மனிதமும் தான் இல்லையா!
எழுத ஊக்கிய நட்புக்களுக்கு நன்றியோடு தொடரும்.....(எப்போ?? எப்பயாவது)