பெண்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 மார்ச், 2016

நம்பிக்கை நட்சத்திரம்.

ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே!!
ஒற்றை தூறலுக்குப் பின்
ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும்
பட்டமரம் போல துளிர்க்கிறது
சிறகுதிர்ந்த என் நம்பிக்கை
சின்னவள் உன் குரல் கேட்டு!

படித்த பெண்கள் இன்று பலருண்டு
உன் போல் படிக்கும் பெண்கள்
தான் சொற்பம்!!

அழகுக்குறிப்பு,ஐந்தாறுவகை கூட்டு
ரங்கோலி மற்றும் ராசிபலன் என
அடுக்கிய பெண்ணிதழ்கள் கண்டு
அயர்ந்திருந்த வேளையிலே
இலக்கியம் பேசும் உன் இனிய குரல் கேட்டு
கண்நிறைய பார்க்கின்றேன்- என்
கரும்பலகையில் விரிந்திருக்கும் வெண்மலர்களை!!

கண்ணுக்கு மைபூசி
கருங்கூந்தல் நெய்பூசி
பெண்ணுக்கு அணிசெய்யும்
பெற்றோர்கள் வரிசையிலே ..

கைகளிலே நூட்கள் தந்து
கருத்தினிலே நுட்பம் விதைத்து
மாறுபட்டு நிற்கும் உன் பெற்றோருக்கு
கூறும் என் நன்றிகள் !!

வெகு சிறியது தான் உன் நூல் அறிமுகம்
ஆனால் அதன் தாக்கம் பாதித்திருக்கிறது
என் வேர் வரை !

நிலோபர், தஸ்லிம்
ஆஷா பானு என
என் செல்லங்கள் அத்தனையும்
கண்டுவிட்டேன் உன் வடிவில் !!

ஒரு சின்ன விடியலை
எனக்குமட்டும் நிகழ்த்திக் காட்டிய
நட்சத்திரமே!! உன்னால்
இனி பெண்கல்வி பேசுவேன்
புதிய தெம்போடு !!

 கூலாங்கற்கள் நூலைஅறிமுகம் செய்யும் ஆயிஷாவின் லிங்க்

பி.கு
அந்த விடியோ வை கேட்ட நொடியே என்னை மலர்த்திய, என் பேனாவை பேசவைத்த ஆயிசாவுக்கு என் அன்புப்பரிசு:)