செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

லாரி பேக்கர்- மேஜிக் மேக்ர்

 இரண்டு லட்சத்துக்குள் பட்ஜெட் வீடு, ஏழு லட்சத்தில் மாடி வீடு என்பது தான் லாரிபெக்கர் பற்றி நான் அறிந்தது. கொஞ்சம் வாசிப்புக்குப்பின் உள்ளூர் வளங்களை வைத்து பாரம்பரிய அடிப்படையிலான அவரது கட்டிடங்கள் மனத்தை கட்டி இழுக்க லாரியின் மேஜிக் எங்கே எப்படி தொடங்கியிருக்கும் என்று அறியும் ஆவலில் தான் இந்த புத்தகத்தை எடுத்தேன்.

  லாரியின் காதல் மனைவியின் வாய்மொழியாக விரிகிற அவரது வரலாற்றை வாசிக்கயில், அவரை எத்தனை சிறிய சட்டத்துக்குள் இருத்திப் பார்த்திருக்கிறேன் என வெட்கப்பட்டுப்போனேன். 

   பேக்கர் என இரண்டாம் பெயர் சொல்லி அழைப்பது தான் ஆங்கிலேயர் பாணி. ஆனால் அவரது வரலாறு லாரி என அழைக்கும் மனதுக்கு நெருக்கமான நண்பராகவே புத்தகம் எங்கும் பயணிக்கிறார். 

      இன்றைய நுழைவுத்தேர்வு முறைகள் அன்று இருந்திருந்தால் முதல் முறையே வீட்டுக்கு அனுப்பப் பட்டிருப்பார். இப்படித்தான் தொடங்குகிறது இவரது கதை. ஆனால் அதற்குப்பின் விரியும் அவரது சாகசங்கள், சேவைகள், காதல், பயணம் என அத்தனை சுவையாக நகர்கிறது புத்தகம். அடிப்படையில் மூன்று விசயங்கள் இந்த நூலில் கவனம் கொள்வதாக இருக்கிறது.

 1. முதல் உலகப்போருக்கு முன் தொடங்கும் அவரது வாழ்வில் இரண்டு உலகப்போர்,  சீனா இந்தியா போர் அதற்குப்பின்னான கேரளாவில் அச்சுதன் நாயரின் ஆட்சி வரை பின்னணியில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

2. தன் வாழ் நாளின் பாதி பகுதியை ஒரு மதராஸி டாக்டரின் வெள்ளைக்கார கணவராக அவருக்கு உதவியாளராக குன்றா காதலுடன் பணி செய்கிறார். 

3. எனினும் அவரது தொழில் திறமையும், பரந்த மனப்பாண்மையும் அவரைக்கொண்டே அவரது டாக்டர் மனைவியை நினைவுபடுத்துகிறது காலம்.

  ஒரு பொறியாளழக மட்டுமின்றி, மயக்கவியல் நிபுணராக, போர் நடக்கும் இடங்களில் ட்ராக் ஓட்டியாக இன்னும் என்னென்ன சாகசங்களை எல்லாம் அறிய "பறவைக்கு கூடுண்டு, அனைவர்க்கும் வீடு" என்ற நூலை வாசியுங்கள். தமிழில் ஈரோடு வெ.ஜீவானந்தம் 


செவ்வாய், 10 மே, 2022

T.C கொடுப்பார்களா ஆசிரியர்கள்??

 கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை    பார்த்ததில் இருந்து ஆசிரியர்களுக்கு ஆதரவான, மாணவர்களுக்கு ஆதரவான என்கிற  இரு வேறு வகையான மனநிலைகளை பார்க்க முடிகிறது. இதுவே எத்தனை பெரிய அபத்தம்.

 ஒரு குடும்பத்தகராறில் அப்பா அல்லது கணவருக்கு ஒருசாராரும், மகன் அல்லது மனைவிக்கு ஒரு சாராரும் பேசுகிற நிலை வந்தால் அதற்கு பின் அங்கு ஒட்டுப்போட்ட உறவே சாத்தியம். அதை நிலை தானே இங்கே பள்ளிக்கும். 

                ஒரு சிறுவன் அல்லது சிறுமி தன் வயதுக்கு மீறிய செயல்களை செய்கிறார்கள் எனில் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கும். தன் வயதுக்கு மீறிய நட்பு வட்டத்தில் அவர்கள் இருப்பர். அவர்களது நடத்தை மாற்றத்தை உடனடியாக கணித்து மடைமாற்றும் வழிகாட்டி இல்லாதிருப்பர். இன்றைக்கு தேதியில் சிறிதோ, பெரியோ உடல் எடையில் தொடங்கி, தூக்கக்குறைபாடு மாதிரியான மாற்றம் ஏற்படாத பள்ளி வயது பிள்ளைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிருமிநாசினி விளம்பர்களில் வருவதைப் போல் 99.9% பிள்ளைகள் பாதிக்கப்பட்டேயிருக்கிறார்கள். 

                 நம் வீட்டு பிள்ளைகளை சரி செய்ய நாம் எடுக்கும் பொறுமையான மெனக்கெடலை ஏன் பள்ளிகளில் எடுக்க முடிவதில்லை. ஒன்று  புரிதல் குறைபாடு அடுத்தது பாடம் முடித்து பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்த வேண்டிய அவசர நிலை. ஐயா எட்வின் அவர்கள் தன் பதிவில் குறிப்பிட்டதைப் போல மகிழ்வோடு பள்ளிக்கு வரும் சூழலே ஆசிரியர் மாணவர் உறவுக்கு  புத்துயிர் அளிக்கும் மற்றபடி இந்த டீ.சி கொடுக்கிறத பற்றி எல்லாம் பதற வேண்டாம் சகோதரர்களே! அதுவும் 99.9% சும்மா மிரட்ட மட்டுமே பயன்படும். அப்படி மிரட்டக்கூட வேண்டாத பள்ளிச்சூழலை உருவாக்க என்ன செய்யலாம் என்று சிந்திப்போம், பேசுவோம், செயல்படுவோம்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

கற்பிதங்கள் களைவோம்



 ஐந்தாம் வகுப்போ என்னவோ அப்போது அப்பா எனக்கு அக்பர் பீர்பால் கதைகள் ஆயிரம் என்ற புத்தகத்தை கோடை விடுமுறையில் வாங்கித் தந்தார். ஆர்வமாய் அந்த விடுமுறை முழுவதும் அதை வாசித்துத் தீர்த்தேன். 
அதன் பின் பாடத்தில், சிறுவர்மலர், பாப்பாமலரில் தெனாலிராமன், மரியாதைராமனும் கிருஷ்ண தேவராயரும் என எல்லா கதையும் அந்த ஆயிரம் அக்பர் பீர்பால் கதையில் படித்ததாகவே இருக்கக் கண்டேன்.  அதைவிட வியப்பூட்டிய விசயம் ஒன்று. மொகலாயர்கள் ஆட்சி என்கிற பாடம் எனது உயர்நிலைப் பள்ளியில் வந்த போதும் அக்பர் அவையை அலங்கரித்த நவரத்தினங்கள் என அழைக்கப்பட்ட ஒன்பது மந்திரிகளில் தோடர்மாலைத் தான் வரலாறு கொண்டாடுகிறது. பீர்பால் ஒரு சொல்லோடு முடிகிறார். தீபிகா ராகத்தைப் பாடி தீபத்தோடு தீபமாக இணைந்ததாக தொலைக்காட்சித் தொடர் புல்லரிக்க, பாடப்புத்தகத்தில் “தான்சேன் என்ற இசை மேதை அக்பர் அவையை அலங்கரித்தார்” என்று ஒரு வரியில் முடிகிறது தான்சேன் கதை. இப்படியான கற்பிதங்கள் அல்லது அதீதங்கள் எப்படி துளிர்த்தன பலமுறை என எண்ணியதுண்டு. 

        இப்போது கண்ணெதிரே வரலாற்றுத் திரிபுகளை பார்க்க முடிகிறது. அதிலும் கலாம் ஐயா மேல் என்ன தீராத காதலோ! இரண்டு பகிர்வுகள். இரண்டு ஆண்டுக்கு முன் என நினைவு. யாரோ ஒரு அப்பிராணி முகநூல் நட்பு  சின்னஞ்சிறு வயது கலாமும் அவரது தாயாரும் இருக்கும் அரிய புகைப்படம் என ஒன்றை Reshare பண்ண “என்ன சகோ கலாம் அம்மா பொட்டு வச்சிருக்காங்க? “ என நான் கேட்க, அவர் அந்த பதிவை அழித்ததாக நினைவு. போன வருடம் அதே படம் கலாமை வளர்த்த இந்து தாயுடன் என வேறு இடத்தில் பார்த்தேன். இரண்டு ரூபாய் Group. தொலையட்டும் என விட்டுவிட்டேன். அதே படம் சில காலத்துக்கு முன் மோடியும், அவரது ஏழைத்தாயும் என பகிரப்பட்டது.

இப்போ லேடஸ்டா அரிய பழைய புகைப்படங்களின் தொகுப்பு ஒன்று வலம் வருகிறது. அதில் ஊடுபாவாக இரண்டு போலிக்கருத்துகள் கலக்கப் பட்டிருக்கிறது. அறியாமல் தான் நம் நண்பர்கள் பலரும் பகிர்கிறார்கள். பேப்பர் போடும் பையனாக இளவயது கலாம் எனும் ஒரு படம். அந்த பேப்பர் போடும் பையன் நவீன சைக்கிள் வைத்திருக்க Google reverse image search செய்தால் அது Fake என ஆதாரத்தோடு வருகிறது. ஏன் இந்த வேலை!  எதற்காக இப்படியான திரிபுகள்!! மற்றொரு போலித்தகவல் என்னவென கேட்கவில்லையே! ஜெயலலிதா அவர்களுடன் எழுத்தாளர் சிவசங்கரி இருக்கும் படத்தை சிறுவயது நிர்மலா சீதாராமன் என்கிறார்கள்! இது இட்லினா சட்னியே நம்பாது மொமண்ட்!

         இப்போ என்னதான் சொல்லவர? என இங்க வரை கேட்குது. அதாச்சும் "அவசரப்பட்டு பகிர்ந்து வரலாற்றுத் திரிபுக்கு நம்மை அறியாத துணை போகாதிருப்போம்!" டாட்

ஞாயிறு, 6 ஜூன், 2021

சொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்


மீம், ட்ரோல் MCக்கள் காலம் இது. இதற்கு எல்லாம் பல ஆண்டுகள் முன்பே  அமுல் நிறுவனம் ஆங்கில  செய்தித்தாள்களில் அன்றைய சென்சஷன் செய்தியை அமுல் பாப்பாவை வைத்து  பட்டர் விளம்பரத்துக்கு ஏற்றவாறு கார்ட்டூன்கள் வெளியிடும். அதைப் போல  கடந்த இரண்டு ஆண்டுகள் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகள் சிலவற்றில் இடம்பெற்ற முக்கிய சொற்களின் வேர்ச்சொல் தேடும் ஆராய்ச்சி தான் சொல்லேர். தீக்கதிர் வண்ணக்கதிரில் தொடராக வந்த சொற்களில் ஐம்பது சொற்களை எடுத்து தொகுக்கப்பட்டது இந்நூல். வழக்கமாக ஆங்கிலச் சொல்லின் பொருளையும் வேர்ச்சொல்லையும் மட்டுமே தேடிப் பழகிய எனக்கு இந்த நூலில் ஆர்வம் வர காரணம் ....
         வானம்பாடிகள் காலம் தொட்டு எழுத்துலகில் புதுகை படைப்பாளர்களின் பங்கு தனித்துவமானது.  புதுகையின் எத்தனை எத்தனையோ சூப்பர்ஸ்டார் படைப்பாளர்கள் மத்தியில் இவர் ரா.பார்த்திபன் பாணி  புதிய பாதை படைப்பாளி அண்டனூர் சுரா அவர்கள். அவர் புனைவுகள் எழுதினால் கூட அது ஒரு உண்மை நிகழ்வின் இருவர் திரைப்பட பாணி மேக்கிங் ஆகவே அது இருக்கும். அப்பல்லோ, எண்வலி சாலை என ஆழமான அழுத்தமான இவரது வேறு படைப்புகள் தந்த அனுபவத்தை நம்பி வாசிக்கத்தொடங்கிய என் ஆர்வம் சொல்லேரிலும் வீண்போகவில்லை.
         ஐயன் திருவள்ளுவர் என சனதான கோட்டையில் தமிழ் ஈட்டி எரிந்து தான் தொடங்குகிறது புத்தகத்தின் முதல் வேர்ச்சொல் தேடல். பின் தொடரும் ஒவ்வொரு பக்கமும் இந்தச் சொல்லை ஏன் இத்தனை நாள் நாம் பயன்படுத்தவில்லை! இதை ஏன் பயன்படுத்தினோம் என்றெல்லாம் மலைக்க வைக்கிறது. பாராளுமன்றம் ஏன் நாடாளுமன்றமானது? பத்தரை மாற்று தங்கம் என்கிறோமே அப்டின என்ன? Surfexcel க்கும் Tide க்கும் என்ன வித்தியாசம்? இன்னும் தர்பார், GST, மோடி என பல தெறிப்பான தேடல்கள். அட! மாட்டுத்தாவணி னா இது தானா? பிலாக்கணம் னு எவ்ளோ ஈஸியா சொன்னோமே அப்டின்னா இது தானா? என வருந்தவும் வைக்கிறது. நல்ல தமிழ் பேரா சொல்லுங்க என கேட்கும் இளவல்களுக்காக ஆர்கலி, வயமா என ரெண்டு பெயர்களும் கிடைத்தது.  தலித், துவரி, குதலை, தீனபந்து என பல  தலைப்புகள் நுணுக்கமாக நோட்ஸ் எடுத்துகொள்ள சொல்கின்றன. ஐ, கொந்தல் என்ற ரெண்டே தலைப்புகள்  மட்டும் முன்பு அள்ளி அள்ளி வழங்கபட்டிருக்கும் பிற தலைப்புக்கான தகவலை, உழைப்பை கேட்கின்றன. மற்றபடி நூற்றைம்பது ருபாய் விலையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் இந்நூல் தேநீரோ அரசியலோ இல்லாமல் ஒரு நாளையும் கழிக்க முடியாத எவர்க்கும் சுவையான அனுபவமாக இருக்கும். வாங்கி பாதுகாக்க வேண்டிய நூல் "சொல்லேர்"