திங்கள், 9 ஆகஸ்ட், 2021

கற்பிதங்கள் களைவோம்



 ஐந்தாம் வகுப்போ என்னவோ அப்போது அப்பா எனக்கு அக்பர் பீர்பால் கதைகள் ஆயிரம் என்ற புத்தகத்தை கோடை விடுமுறையில் வாங்கித் தந்தார். ஆர்வமாய் அந்த விடுமுறை முழுவதும் அதை வாசித்துத் தீர்த்தேன். 
அதன் பின் பாடத்தில், சிறுவர்மலர், பாப்பாமலரில் தெனாலிராமன், மரியாதைராமனும் கிருஷ்ண தேவராயரும் என எல்லா கதையும் அந்த ஆயிரம் அக்பர் பீர்பால் கதையில் படித்ததாகவே இருக்கக் கண்டேன்.  அதைவிட வியப்பூட்டிய விசயம் ஒன்று. மொகலாயர்கள் ஆட்சி என்கிற பாடம் எனது உயர்நிலைப் பள்ளியில் வந்த போதும் அக்பர் அவையை அலங்கரித்த நவரத்தினங்கள் என அழைக்கப்பட்ட ஒன்பது மந்திரிகளில் தோடர்மாலைத் தான் வரலாறு கொண்டாடுகிறது. பீர்பால் ஒரு சொல்லோடு முடிகிறார். தீபிகா ராகத்தைப் பாடி தீபத்தோடு தீபமாக இணைந்ததாக தொலைக்காட்சித் தொடர் புல்லரிக்க, பாடப்புத்தகத்தில் “தான்சேன் என்ற இசை மேதை அக்பர் அவையை அலங்கரித்தார்” என்று ஒரு வரியில் முடிகிறது தான்சேன் கதை. இப்படியான கற்பிதங்கள் அல்லது அதீதங்கள் எப்படி துளிர்த்தன பலமுறை என எண்ணியதுண்டு. 

        இப்போது கண்ணெதிரே வரலாற்றுத் திரிபுகளை பார்க்க முடிகிறது. அதிலும் கலாம் ஐயா மேல் என்ன தீராத காதலோ! இரண்டு பகிர்வுகள். இரண்டு ஆண்டுக்கு முன் என நினைவு. யாரோ ஒரு அப்பிராணி முகநூல் நட்பு  சின்னஞ்சிறு வயது கலாமும் அவரது தாயாரும் இருக்கும் அரிய புகைப்படம் என ஒன்றை Reshare பண்ண “என்ன சகோ கலாம் அம்மா பொட்டு வச்சிருக்காங்க? “ என நான் கேட்க, அவர் அந்த பதிவை அழித்ததாக நினைவு. போன வருடம் அதே படம் கலாமை வளர்த்த இந்து தாயுடன் என வேறு இடத்தில் பார்த்தேன். இரண்டு ரூபாய் Group. தொலையட்டும் என விட்டுவிட்டேன். அதே படம் சில காலத்துக்கு முன் மோடியும், அவரது ஏழைத்தாயும் என பகிரப்பட்டது.

இப்போ லேடஸ்டா அரிய பழைய புகைப்படங்களின் தொகுப்பு ஒன்று வலம் வருகிறது. அதில் ஊடுபாவாக இரண்டு போலிக்கருத்துகள் கலக்கப் பட்டிருக்கிறது. அறியாமல் தான் நம் நண்பர்கள் பலரும் பகிர்கிறார்கள். பேப்பர் போடும் பையனாக இளவயது கலாம் எனும் ஒரு படம். அந்த பேப்பர் போடும் பையன் நவீன சைக்கிள் வைத்திருக்க Google reverse image search செய்தால் அது Fake என ஆதாரத்தோடு வருகிறது. ஏன் இந்த வேலை!  எதற்காக இப்படியான திரிபுகள்!! மற்றொரு போலித்தகவல் என்னவென கேட்கவில்லையே! ஜெயலலிதா அவர்களுடன் எழுத்தாளர் சிவசங்கரி இருக்கும் படத்தை சிறுவயது நிர்மலா சீதாராமன் என்கிறார்கள்! இது இட்லினா சட்னியே நம்பாது மொமண்ட்!

         இப்போ என்னதான் சொல்லவர? என இங்க வரை கேட்குது. அதாச்சும் "அவசரப்பட்டு பகிர்ந்து வரலாற்றுத் திரிபுக்கு நம்மை அறியாத துணை போகாதிருப்போம்!" டாட்

ஞாயிறு, 6 ஜூன், 2021

சொல்லேர்_ பழைய சொல், புதிய தேடல்


மீம், ட்ரோல் MCக்கள் காலம் இது. இதற்கு எல்லாம் பல ஆண்டுகள் முன்பே  அமுல் நிறுவனம் ஆங்கில  செய்தித்தாள்களில் அன்றைய சென்சஷன் செய்தியை அமுல் பாப்பாவை வைத்து  பட்டர் விளம்பரத்துக்கு ஏற்றவாறு கார்ட்டூன்கள் வெளியிடும். அதைப் போல  கடந்த இரண்டு ஆண்டுகள் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகள் சிலவற்றில் இடம்பெற்ற முக்கிய சொற்களின் வேர்ச்சொல் தேடும் ஆராய்ச்சி தான் சொல்லேர். தீக்கதிர் வண்ணக்கதிரில் தொடராக வந்த சொற்களில் ஐம்பது சொற்களை எடுத்து தொகுக்கப்பட்டது இந்நூல். வழக்கமாக ஆங்கிலச் சொல்லின் பொருளையும் வேர்ச்சொல்லையும் மட்டுமே தேடிப் பழகிய எனக்கு இந்த நூலில் ஆர்வம் வர காரணம் ....
         வானம்பாடிகள் காலம் தொட்டு எழுத்துலகில் புதுகை படைப்பாளர்களின் பங்கு தனித்துவமானது.  புதுகையின் எத்தனை எத்தனையோ சூப்பர்ஸ்டார் படைப்பாளர்கள் மத்தியில் இவர் ரா.பார்த்திபன் பாணி  புதிய பாதை படைப்பாளி அண்டனூர் சுரா அவர்கள். அவர் புனைவுகள் எழுதினால் கூட அது ஒரு உண்மை நிகழ்வின் இருவர் திரைப்பட பாணி மேக்கிங் ஆகவே அது இருக்கும். அப்பல்லோ, எண்வலி சாலை என ஆழமான அழுத்தமான இவரது வேறு படைப்புகள் தந்த அனுபவத்தை நம்பி வாசிக்கத்தொடங்கிய என் ஆர்வம் சொல்லேரிலும் வீண்போகவில்லை.
         ஐயன் திருவள்ளுவர் என சனதான கோட்டையில் தமிழ் ஈட்டி எரிந்து தான் தொடங்குகிறது புத்தகத்தின் முதல் வேர்ச்சொல் தேடல். பின் தொடரும் ஒவ்வொரு பக்கமும் இந்தச் சொல்லை ஏன் இத்தனை நாள் நாம் பயன்படுத்தவில்லை! இதை ஏன் பயன்படுத்தினோம் என்றெல்லாம் மலைக்க வைக்கிறது. பாராளுமன்றம் ஏன் நாடாளுமன்றமானது? பத்தரை மாற்று தங்கம் என்கிறோமே அப்டின என்ன? Surfexcel க்கும் Tide க்கும் என்ன வித்தியாசம்? இன்னும் தர்பார், GST, மோடி என பல தெறிப்பான தேடல்கள். அட! மாட்டுத்தாவணி னா இது தானா? பிலாக்கணம் னு எவ்ளோ ஈஸியா சொன்னோமே அப்டின்னா இது தானா? என வருந்தவும் வைக்கிறது. நல்ல தமிழ் பேரா சொல்லுங்க என கேட்கும் இளவல்களுக்காக ஆர்கலி, வயமா என ரெண்டு பெயர்களும் கிடைத்தது.  தலித், துவரி, குதலை, தீனபந்து என பல  தலைப்புகள் நுணுக்கமாக நோட்ஸ் எடுத்துகொள்ள சொல்கின்றன. ஐ, கொந்தல் என்ற ரெண்டே தலைப்புகள்  மட்டும் முன்பு அள்ளி அள்ளி வழங்கபட்டிருக்கும் பிற தலைப்புக்கான தகவலை, உழைப்பை கேட்கின்றன. மற்றபடி நூற்றைம்பது ருபாய் விலையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் இந்நூல் தேநீரோ அரசியலோ இல்லாமல் ஒரு நாளையும் கழிக்க முடியாத எவர்க்கும் சுவையான அனுபவமாக இருக்கும். வாங்கி பாதுகாக்க வேண்டிய நூல் "சொல்லேர்"

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

அறிவை விரிவு செய்

 



உலகெல்லாம் ஒற்றை வானம்

உயிருக்கெல்லாம் ஒன்றே மாமழை

பசித்து பருகி வேர்விடும் விதைகள்

பரந்து விரிந்த பெருவனமாகும்

கைக்கெட்டும் தூரத்தில் அறிவுச்சுரங்கம்

கண்டடைய முயன்றால் வானாய் விரியும்


கொட்டிக்கிடக்கும் பலநூறு

விண்மீன்கூட்டம்

அதில் சுட்டுகிறேன் சில 

துருவ நட்சத்திரம்


தீநுண்மியை விடவும் கொடிது

தீண்டாமை என்றே உணர

அம்பேத்கரை படி


விளக்கேற்றி மணியடித்து

விரட்ட முடியுமா கொரோனாவை

பகுத்தறிவு பகலவனைப்படி


அரிச்சுவடியில் படித்த ஔவையை

மறந்திருப்பாய்

ஆண்டிராய்டு காலத்தில்

அடாவை மறந்திருப்பாய் 

பெண்கல்வி  சிறப்புணர

பாவேந்தனைப் படி


வலதுக்கு இசைவாக வங்கிகள் வளைய

வறுமைக்கு ஏன் வரி மேல் வரி

மார்க்ஸை படி


சரித்திரத்திற்கும் சாஸ்திரத்திற்கும் 

நூல் அளவே வேறுபாடு இருப்பதை 

நுணுக்கமாய் உணர அரசியல் படி


பருகிட தணியாத தாகம் அறிவு

பகிர்ந்திடக் குறையாத செல்வம் அறிவு

நீட்டு நீட்டு என்று

நீட்டியும் மடக்கியும்

பூட்ட முடியாத புதையல் அறிவு


அறிவை விரிவு செய்

ஒப்பனைகள் களையும்


ஒப்பிலா அறிவின் சிறகால்

வானம் வசப்படும்

வரலாறு சீர்பெறும்

 அறிவே பார்வை நல்கும்

அறிவே அறத்தைப்பேணும்

அறிவே மனிதம் காக்கும்

அறிவே மனத்தடைகள் போக்கும்


நாடுக எட்டுத்திக்கும்

சூடுக அறிவின் பேரொளி


நாடுகள் நடுவே ஓடும் 

கோடுகள் அழிந்து போகும்


நாளும் பொழுதும் பூசிய 

செருக்கின் பிடறியை உலுக்கும்


மதத்தின் பேரால் வெடிக்கும்

மரணத்தின் ஓலம் அடங்கும்


கண் எட்டும் தூரத்தில்

மருத்துவத்தின் மகத்துவம் புரியும்


விண்முட்டும் சின்னங்கள்

வீண் விரயமென அறியும்




கால் செருப்பு தேசம் ஆண்ட

காலங்கள் மறைந்து போகும்


தார் பூசி மறைத்த போதும்

தமிழ் என்றும் தரணி ஆளும்


நாளை கிழக்கில் மட்டுமல்ல

எட்டுத்திசையிலும் வெளுக்கும்


அறிவற்றங் காக்கும் கருவி

அகிலம் மேவும் புரவி

அறிவை விரிவு செய்

ஆற்றலால் உலகை வெல்



சனி, 13 பிப்ரவரி, 2021

டகோடா38,வெண்மணி44- நூல் அறிமுகம்

 புதுக்கோட்டைக்கு இதுவரை எண்ணிலடங்கா உலகசினிமாக்களை அறிமுகம் செய்த எஸ்.இளங்கோ ஐயா இந்த முறை தந்திருப்பது பன்னாட்டு குறுப்படங்களைப்பற்றிய அறிமுகம். இருப்பத்தியோரு குறும்படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். மையோடு கொஞ்சம் பாஸ்பரசை கலந்துவிட்டாரோ என்னவோ, திருப்புகிற பக்கம் எல்லாம் தீப்பிடிக்கிறது. ஒவ்வொரு தலைப்பும் “நீ தான் தைரியசாலி ஆச்சே, பேசு” என்பதைப்போல் அனல் வீசுகிறது. புத்தகத்தலைப்பு “டகோடா 38 வெண்மணி44”

 John Pilger இயக்கிய The war on democracy என்ற குறும்படம். வியட்நாம், கம்போடியா, பொலிவியா போல பல்வேறு நாடு குடியரசு வேண்டி சந்தித்த நெருக்கடிகளை படம் எடுத்த அனுபவசாலி பில்கர். பொதுவாக உலகில் எது நடந்தாலும் நாஸ்ட்ரோடோமஸையும், மயன் கேலண்டரையும் சுட்டிக்காட்டி இது முன்பே எழுதப்பட்ட விதி என பலர் பேசுவதை பார்த்திருக்குறோம், அப்படியான மயன் பழங்குடியினரின் வாழ்வு எப்படி இருந்தது என்கிறது பில்கரின் குறும்படம். ஒட்டுமொத்த மயன்களை இரண்டே சதவீதம் ஸ்பானிய முதலாளிகள் எப்படிச் சுரண்டினார்கள் என வாசிக்கும் போதே டெல்லி விவசாயிகள் போராட்டம் கண்முன் நிழலாடுகிறது.

               ஃபாரன்ஹீட்9/11 எடுத்து உலகையே ஒரு கலக்கு கலக்கிய மேக்கேல் மூரின் Capitalism-a love story அடுத்த படம். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பான்மையான பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகி உள்ள சூழலில்  வெள்ளைமாளிகையில்  ஆட்சிக்குழுவில் கார்ப்பரேட்டுகள் சில பதவி வகிக்கத்தொடங்கியதன் விளைவாக தனியார்மயமாக்கப்பட்ட துறைகளிலல்  உழைப்பாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் ஆவணப்படுத்தும் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. லாபம் 145% சதவீதமாகவும் ஓதியுயர்வு 1% சதவீதமாகவும் உள்ளது. ஒரு தனியார் விமான ஓட்டுநர் $20000 வருமானம் பெறாத நிலையும், பரிட்சார்த்தமான இயங்கிய கூட்டுறவு ஆலையை சேர்ந்த ஒரு ரொட்டி தயாரிப்பு ஊழியர் $65000 வருமானம் பெறுகிறார் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

                   Fidelcastro's tape படத்தில் கூபா வரலாற்றோடு அமெரிக்க ஏகாதிபத்தியன் அடாவடி வரலாறும் சேர்ந்தே சொல்லப்படுகிறது. “Rich,poor and trash” நைரோபியின் குப்பையை நம்பி வாழ்கிற மனிதர்களையும், நியூயார்க்கில் குப்பையில் வாழும் மனிதர்களின் வாழ்வையும் ஒப்புநோக்குகிறது. நைரோபியில் குப்பையால் வாழும் மனிதருக்கு நான்கு டாலர் வரை கிடைக்கிறது. எனவே அவர் உலக வங்கியின் கணக்குப்படி அவர் வறுமைக்கோட்டுக்கு மேல் வருகிறார்(!?). அமெரிக்காவிலோ குப்பைக்காரர் 75 டாலர் வரை சம்பாதிக்கிறார். இன்னும் அவர்களது அரசு, பொருளாதார, பொதுச் சிந்தனை என அழகாக அலசுகிறது படம்.

         “India’s hindu fundamentalism “ 25 year of Babri masjid படங்களை பார்த்துவிட்டும் BJP, VHP க்கு ஆதாரவு தெரிவிக்கும் தேசபக்தர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். வச்செல்லாம் பார்க்கல “மோடியையே ரெண்டு ஃபிரேம்ல காட்டுகிறார் மந்தாகினி. 

         டகோடா  பழங்குடியினரை வழக்கம் போல ஏமாற்றி இடத்தை பிடிங்கிக் கொண்டு கதறவிட்ட அமெரிக்கா எப்படி அவர்களை தீவிரவாதியாக்கி பின் மன்னிப்பும் கோரவைத்தது, ஆப்பிரஹாம் லிங்கனே 38 பேருக்கு ஒரே நேரத்தில் தூக்குதண்டனை ஏன் வழங்கினார்(இது வரை உலகில் அறிஙிக்கப்பட்ட Mass hanging) அது வெண்மணியில் எறித்துக்கொல்லபட்ட 44 நாற்பத்திநான்கு பேரோடு எப்படி ஒத்துப்போகிறது  என விலக்குகிற இடம் துல்லியம்.

          ஜான் கீட்ஸின் “ Forever wilt thou live and she be fair என்கிற ode on a Greecian urn கவிதையின் வரிகளின் சாட்சியாய் Under the fallen chinar குறும்படம் விளங்குகிறது. காஸ்மீர் பல்கலைகழகத்தில் போர் சூழலில் பல்கலைகழக வளாகத்தில் வீழ்ந்துகிடக்கிற சினார் மரத்தில் படைக்கப்பட்ட கவிதைகளும், ஓவியங்களும் காலத்தால் நிலைப்பெற்றுவிட்டது. உலக அரசியல், பொருளாதார இடர்களை தற்கால இந்திய சூழலோடு பொருத்திப் பார்க்கத் தூண்டும் கூர்மையான நூல். மழை பதிப்பகம். விலை 120 ரூபாய். படித்தேன் புத்தகத்தில் எழுதப்பட படங்களை பார்த்தேன் ஆவணப்படங்களின் மீதான புரிதல்களை மாற்றுய எஸ். இளங்கோ ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.