செவ்வாய், 3 டிசம்பர், 2019

சாதிச் சுவரா? வர்க்கச் சுவரா?




இப்படி கேட்கப்பட்டால் உடனே சில திடீர் சமுகசிந்தனையாளர்கள் தோன்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாதியே இல்லை. அப்படி இருந்தாலும் அதனால் துயரே இல்லை என்ற ரீதியில் முட்டுக்கொடுக்கிறார்கள்.
   
         அது தீண்டாமை சுவர் இல்லை என்றே வைத்துக்கொள்வோம், அது ஒரு வர்க்கச் சுவர் என்பதில் ஐயம் இல்லையே? என்னிடம் பணம் இருக்கு. ஏழை உலகம் அசிங்கமா இருக்கு. நான் 20 அடி உயரத்தில் 3அடி அகலத்தில் பீம் எனப்படும் கம்பிகள், தூண்கள் இல்லாத பலமற்ற பிரமாண்டமா சுவரை எழுப்பி என் வீட்டின் எழில் மிகு தோற்றத்தை பாதுகாப்பேன். அந்த சுவர் நாள்பட்டு சிதிலமடைந்து நிற்கிறது. அதை நான் ஏன் சரி செய்ய வேண்டும்? சுவர் உடைந்துவிடக்கூடிய நிலையில் இருப்பது தெரிந்து ஏன் அருகே குடியிருக்கிறீர்கள்?? என்றெல்லாம் பணம் படைத்தவன் கேள்வி எழுப்பலாம்.

          அது கேட்டட் கம்யூனிட்டி என சொல்லபடுகிற மற்ற ஏரியா ஆட்கள் புழங்க தடை செய்யப்பட்ட, அரசு அனுமதித்த பகுதியா? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. அது பணம் படைத்த வர்க்கத்தை மனம் நோகச் செய்துவிடும். அது சனநாயக மாண்பில்லை. அந்த பதினேழு பேரும் எனக்கு உறவில்லை. என் சாதி இல்லை. என் வர்க்கமில்லை. அந்த நெருப்பு கக்கும் வீடியோவை பார்த்துவிட்டு என்னால் நிம்மதியாக தூங்கமுடியும் என்றால் நான் மனித இனம் தான் என்றால் மிருகங்கள் என்னை விட உயர்ந்தவை. நான் நான் எனும் நாணை அந்த நெருப்பு பொசுக்கட்டும். 

ஞாயிறு, 21 ஜூலை, 2019

கொரில்லா - திரைப்பார்வை

         லிக்கர் ட்ரிங்கிங் இஸ் இன்சூரியஸ் டூ ஹெல்த் என மொட்டை ராஜேந்திரன் வாய்ஸோடு தொடங்கும் போது தியேட்ரே சலம்புகிறது.
     
               இன்றைய ட்ரெண்டாக ஒரு அனிமேசன் பின்னணியில் ப்ளாஷ்பேக். ஆயாவீட்டுக்கு வெக்கேசன்ல போறது பெருமையா?? நம்ம கடமை. அம்மாவை இழந்த கொரில்லா ஹீரோவையே சின்னம்மாவா நினைச்சு அவன் காலையே கட்டிப் புடுச்சிக்கிட்டு இருந்துச்சாம் என இடைவெளியே கொடுக்காமல் காமெடியில் அடித்து ஆடுகிறார்கள். ஜீவா மற்றும் அவரது நண்பர்கள், நாம நல்லாயிருக்கணும்ன எதுவும் தப்பில்லை தத்துவம் கடைபிடிக்கும் இன்றைய பல இளைஞர்களின் பிம்பம்.

        சீட்டிங் பார்ட்டி என தெரிந்தே அவரை காதலிக்கும் ஹீரோயின் என்ன லாஜிக்கோ என்றெல்லாம் கேட்கப்பிடாது. M.C என்கிற மீம் கிரியேட்டர்கள் காலத்தில் படமே மீம் போல நாம் சிரித்துக்கடக்கயில் இன்ட்ரோ கொடுக்கிறார் அந்த விவசாயி. அட!! நம்மூர்காரர் மதன். வேலை போனதற்கு ட்ரீட் கேட்கும் நண்பர்கள், தற்கொலை செய்துக்கப் போறேன் என புலம்பும் நண்பனிடம் சைடுடிஷ் சொல்லு மச்சான் என எதையும் எளிமையாய், கேலியாய் கடக்கும் நண்பர்கள் குழுவோடு ஒரு வங்கியை கொள்ளையடிக்க கிளம்புகிறார் அந்த. பொறுப்பான விவசாயி. அவரது வசனங்கள் ஏழைவிவசாயின் கதறலாக இருக்கிறது. அவரை இஸ்லாமிய விவசாயியாய் காட்டியமைக்கு இயக்குனருக்கு ஸ்பெசல் பொக்கே ஒன்று பார்சல். என்ன ஒன்னு மதன் சௌக்கார் ஜானகி ரேஞ்சுக்கு ஆல்வேஸ் அழுதபடி இருக்கிறார். பாத்திரம் அப்படி. 
     
          யோகிபாபு வங்கி நடைமுறைகளை செம்மயா கலாய்கிறார். ஆனாலும் திரும்பத்திரும்ப அவரை கொரில்லாவோடு ஒப்பிடுவது பலநேரம் சிரிப்புக்கு பதில் ஒருவர் தோற்றத்தை கேலி செய்து கொண்டே இருப்பது சரியா என்ற கேள்வியையே எழுப்புகிறது. மொட்டை ராஜேந்திரனின் கடைக்கு ஒயின் ஷாப் திறக்கும் வரை ரெஸ்ட் எடுக்கவரும் சதீஸ் மற்றும் ஒரு நம்ம ஊர்காரர். ஸ்க்ரீனை மறைக்கும் அத்தனை அடர்த்தியான முடியோடு க்ளோசப் காட்சி. ஊர்கார சகோக்கள் இருவருக்கும் தொடர்ந்து வெற்றிப்படங்கள் கிடைக்க வாழ்த்துகள்.

         Back to சினிமா. வசனங்கள் படத்துக்கு கைத்தட்டலை வாங்கி கொடுத்தபடியே இருந்தது. காங் பாத்திரத்தில் ஒரு சிம்பான்ஸி அட!! நல்லாதான் நடிச்சிருக்கு. எடிட்டர் இன்னும் கொஞ்சம் வெட்டியிருக்கணுமோ?? திரைக்கதையில் சில இடங்களில் ஊசலாடுது.

           சுயநலமாய், விளையாட்டாய் தொடங்கிய செயல் சில நிமிட புகழ் வெளிச்சத்தில் எப்படி அந்த இளைஞர்களை மாற்றுகிறது என்று காட்டியிருக்குறார்கள். லாஜிக்கே இல்லாமல், அழுத்தம் இல்லாமல் இத்தனை விளையாட்டாய் விவசாயப் பிரச்சனையை கையாள்வதா என சில குற்றச்சாட்டுகளை சில விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. போகிற போக்கில் அமித்ஷா, அப்போல்லோ, தெர்மாகோல் என ராவடி செய்திருக்கிறார்கள் படக்குழு. இந்தப் படத்தை கொஞ்சம் சீரியஸா எடுத்திருந்தாலும் அரசியல் நெருக்கடிகளை சந்தித்திருக்கும். கொரில்லா மொத்தத்தில் நல்லதொரு பொழுதுபோக்கு திரைப்படம்.

சனி, 13 ஜூலை, 2019

வசந்தமாளிகை - திரைவிமர்சனம்

கொஞ்சம் நாட்களுக்கு முன் சகஆசிரியத்தோழி ஒருவர் வித்யாசமாய் ட்ரீட் கொடுக்க எண்ணி வசந்தமாளிகை படத்துக்கு எங்கள் குழுவை அழைத்துச் சென்றார். அந்த டீமிலேயே நான் மட்டும் தான் ஜூனியர். கே டிவியில், பின் மதியங்களை அப்பத்தா, தாத்தாவோடு கழித்த நினைவில் நானும் கிளம்பினேன். நான் சிவாஜியை கதாநாயகனாக பெரியதிரையில் பார்த்த முதல் அனுபவம். ரொம்ப யோசித்தும் அவரை அப்பா, தாத்தாவாகக்கூட பெரியதிரையில் பார்த்த நினைவில்லை. படம் தொடங்கிய சில நிமிடங்கள் அஞ்சு ரூபாய் வாங்கிட்டு ஐம்பது ரூபாய்க்கு நடிக்கிறாரே என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேரம் செல்லச்செல்ல அதிலும் குறிப்பாக காதல் வசப்பட்டபின், என்ன ஒரு நடிப்பு. இதயம் இருக்கிறதே அத ஒருதர்க்கு கொடுகிறவரை ரொம்ப விசாலமா இருக்கும், ஆனா கொடுத்த பின்னாடி ரொம்ப சுருங்கிப் போயிடும் என காதல் பேசும் போதும் சரி, பெரியவங்க சம்பாதிச்சதெல்லாம் பாவப் பணம்ன அதை குடிச்சுத்தான் அழிக்கனும் என காலை வாரும்போதும் சரி அப்படி ஒரு துள்ளல். லத்தா எனும் சிவாஜியின் அந்த அழைப்பு காதல் காட்டும் கண்ணாடி. அதற்கு முன் அந்த கண்ணாடி அறையெல்லாம் டம்மி தான். ரப்னே பனாதி ஜோடி என்றொரு ஷாருக் படம் ஷாருக்கும் அனுஷ்கா ஷர்மாவும் துஜ்மே ரப் திக்தாகே என்றொரு பாடல் பெரியவள் ரிப்பீட் மோடில் கேட்பாள். என்னை பார்க்க சொல்லி அவள் நச்சரிக்க, அவள் ஷாருக்கையும் அனுஸையும் பார்த்துக் கொண்டிருக்க, நான் சுற்றி நின்று ஆடிய குட்டீஸில் ஒன்று ஸ்டெப்ஸ் மாற்றிவிட்ட அருகே இருக்கும் சுட்டி அவளை அவசரமாய் திருத்துவதை சுட்டிக்காட்டி ரசித்தேன். சிவகார்த்திகேயன் உன்னவிட்டா யாரும் எனக்கில்ல என உருகும் பாடலில் சமந்தா தோளில் கைவைக்கயில் டைமிங் மிஸ் ஆகும். இப்படி தான் அம்மாவிடம் சூழுரைத்தபடி சிவாஜி ரிவர்சிலேயே வரும் சீனில் பின்னால் இருக்கும் ஸ்டூலில் தட்டி விழப்போகும் நிமிடத்திற்காக காத்திருந்தேன். குறைந்தபட்சம் அதை தடுமாற்றமாக அவர் சமாளிப்பாரோ என யோதித்தபடி இருக்க, அவரோ மிக இயல்பாய் நகர்த்து செம பல்பு கொடுத்தார். எத்தனை டேக்கில் எடுத்திருந்தாலும், சிறு தன்னுணர்வையும் வெளிப்படுத்தாது அவர் நகர்ந்த இடத்தில் நிஐமாவே நிறுவியிருக்கிறார் நடிகர்திலகமென்று. கணவனே கண்கண்ட தெய்வம் காலத்தில் காதலில் தன்மானம் பேசும் வாணிஸ்ரீ பாத்திரம் புதுமை. என் வரையில் வாணி அந்த காலத்து லேடி சூப்பர் ஸ்டார். இருளும் ஒளியும், வாணிராணி படங்களில் அவரது போல்டான நடிப்பை ரொம்ப பிடிக்கும். உங்க அக்காவுக்கு ரொம்ப அகம்பாவம் என சிவாஜி குறைபட்டுக்கொள்ளும் போது குஷி படத்தில் விஜய் விஜயகுமாரிடம் அவ அகம்பிடிச்சவ என புலம்புவது நினைவுக்கு வருது. பிடிக்கலன்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது எனும் வசனத்தை அந்த காலத்திலேயே வைத்த இயக்குனருக்கு ஒரு பூச்செண்டு. வசனங்கள் கூகிலிட வைத்தன. பாலமுருகனின் வசனங்கள் படத்தில் ஒரு முக்கியத்தூண். ஏன் ஏன் ஏன் பாடல் பலரையும் தனைமறந்து தாளமிட வைத்தது, எங்கள் குழுவில் சற்று இறுக்கமான அந்த சீனியர் உட்பட. ஆடை பலவும் இன்றும் ட்ரென்டாகும் ரசனையோடு இருந்தன. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே எங்க காலத்திலே எல்லாம் இப்படி இல்ல. நகைச்சுவைன சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்னு வசனம் பேசிய அந்த பெருசுகளை தேடிக்கிட்டிருக்கேன். வி.கே.ராமசாமியும், நாகேஷும் இணைந்து வரும் காட்சிகள் எல்லாம் கஞ்சா கருப்பு ரகம். எங்க பட்டாளத்தை தாண்டி ஒரு மூத்த தமிழ்குடிமகன் நான் மனக்குரலில் கொடுக்க நினைத்த கமெண்டுகளையும் சேர்த்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். என்ன அந்த காமெடி சீசின்ல் அவர் ரவுசு தாங்க முடியல. மொத்ததில் மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ் "என்னை மன்னிச்சுக்கோங்க பாஸூ, திமிங்கலத்தை டீவில பார்த்து இம்புட்டுத்தான்னு நினைச்சு என் தப்பு தான்" என சிவாஜியிடம் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 17 மே, 2019

செல்லமே!!

சுழற்றி விழிக்கும் அதன் அழகில் மயங்கி
செல்லம் கொஞ்சுகிறாய் நீ
அதுவோ உன் செம்மைபூசிய கன்னங்களையே பருகிக் கொண்டிருக்கிறது!!

சனி, 27 ஏப்ரல், 2019

என்ன சொல்கிறார் தங்கமங்கை கோமதி??

          விளையாட்டில் வெல்வதை நாம் விளையாட்டாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு நாட்டின் ராணுவ பலத்தை அதன் விளையாட்டுச் சாதனைகளை கொண்டே உலகம் கணக்கிடுகிறது. அதனால் தான் ஒலிம்பிக் போட்டிகளை அத்தனை தீவிரமாய் நினைக்கின்றன வளர்ந்த நாடுகள். இதில் நாம் எப்படி?

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இஸ்லாம் என் சகோதர மார்க்கம்

திருப்பூர் குமரனோடு கொடி காத்து நின்று சிறை சென்ற ஐந்து இஸ்லாமிய விடுதலைப் போராட்டவீரர்கள் குறித்து எந்த பாடப்புத்தகமும் நமக்கு சொல்லித்தந்ததில்லை.

ஞாயிறு, 17 மார்ச், 2019

குலக்கல்வி சிறகா? சிலுவையா?

அன்பு நிஷாந்தி அக்கா,
           நலம். நாடுவதும் அதுவே. நீண்ட நெடிய என் சோம்பலை முறித்து ப்போட்டிருக்கிறது உங்களது இன்றைய குலக்கல்வி பற்றி ஒரு முகநூல் பகிர்வு. அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.