திங்கள், 21 செப்டம்பர், 2015

இணையத் தமிழே சகம் வெல்க!

         ஒரு தீபாவளிக்கு திரையில் மின்னி, அடுத்த தீபாவளிக்கு காணாமல் போகும் திரைத்தாரகைக்களுக்கே அத்தனை வரலாறு என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன் மூன்றாம் நூற்றாண்டு முதலே எழுத்துருவை பெற்ற* நம் கன்னித்தமிழுக்குத் தான் வரலாற்றுக்கா பஞ்சம்! சங்கம் வைத்து சான்றோர்  வளர்க்க, தங்கமெனத்  தழைத்துத்தோங்கித் தரணியெல்லாம் மின்னிய தமிழ் மகள், வெள்ளையரால் மதம் பரப்பப் பணிக்கப்பட்ட பாதிரிமாரும், தம்மேல் மதம் கொள்ளச்செய்த தீங்கனியாள்!! தான் படித்தத் தமிழ்த்தேனை ஆங்கிலத்தில் வடித்து அவர்களும் பெற்றனர் அடையாப் பெரும்பேறு!!




          நாடெல்லாம் விடுதலை வேள்வியில் தகிக்கயிலும், தமிழ்மேல் கொண்ட காதல் வற்றாது, சுதந்திர கீதங்களுக்கு மத்தியிலும் தமிழ் மகளை உச்சிமுகர்ந்த புரட்சிக்கவிகளுக்கும் பஞ்சம் இல்லை*! செம்மாந்த தமிழ், சமூகத் தமிழாய், மக்கள் நலன்பாட, கிட்டியது விடுதலையும். பின் வானம்பாடிகளின் * கூட்டுக்குள் வசந்தம் நுகர்ந்தது தமிழ். சான்றோர் பாடி, சான்றோர் துணைகொண்டே கற்கும் நிலையில் இருந்து, மென்மையும் ஆனால் குறையாத மேன்மையும் அடைத்தாள் தமிழன்னை.

        
 எனவே குருவின் தயவால் தமிழ் படித்த நிலை மாறி, அச்சு ஊடகங்கள் தமிழின் கைப்பிடித்து கடைக்கோடித் தமிழனின் இல்லம் வரை கொண்டு சேர்த்தன!! இலக்கியம் சாமானியனை அடைந்த போது மெல்ல நிறம் மாறி தானும் சாமானியனின் வாழ்க்கையை பிரதிபலிக்கத் தொடங்கியது. அவ்வாறு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் வானில் முளைத்த பல விடிவெள்ளிகளுக்கு, விருப்பநூல்ப் பட்டியல் என்றொன்றிருக்கும். அந்த இலக்கிய மேதைகளின் படைப்புக்களோடு, அவர்கள் முன் மொழிந்த நூல்களையும் தேடித்தேடிப் படித்துத் தாகம் அடங்காத கூட்டம் ஒன்று பின்னாளில் எழுதிப் பார்க்கவும்   ஆசைப்பட்டது. காதலர்களைப்போல, கவிஞர்களும் தபால்காரரின் தலை பார்க்கக் காத்திருந்தனர். கடிதங்கள் வந்தனவோ இல்லையோ, கணினிகள் கால் பதிக்கத்தொடங்கின இல்லங்கள் தோறும். நாளும் மெருகேறும் தமிழ் பெண்ணை தானும் துதிக்கத்தொடங்கியது கணினி!!

          வலைப்பூ, முகநூல், கீச்சகம் என மெல்ல ஒரு அழகிய எழுத்துவட்டம் விரிந்து இன்று கட்செவி வரை விரவி நிற்கிறது. மாத, வார இதழ்களுக்கு எழுதி எழுதி, பிரசுரம் காண ஏங்கிய நிலைமாறி எழுதிய அடுத்த நொடியே விருப்பக்குறிகளும், பகிர்தல்களும் என தன் எழுத்தின் கூர்மையை உடனே சோதிக்க முடிகிறது. அச்சு ஊடங்களை போலன்றி தனக்கு பிடித்த அளவுகளில், பலநேரம் வள்ளுவருக்குப் போட்டியாய் இரண்டடி கவிதைகள் தான் இணைய வெளியெங்கும் படைத்துக்குவிக்கிறது இளைஞர் பட்டாளம். மாத, வார இதழ்களும், புதியன புகுத்த எண்ணி, நாவல்கள் சிறுகதைகளாக, பின் ஒருபக்கக் கதையாக, இன்று பத்து செகண்ட் கதைகளாக நவீன யுவதிகள் கூந்தல் போல் நீளம் குறைந்து விட்டன பாவம்!! எது எப்படியோ இன்று காகிதப்புத்தகங்களைக் காட்டிலும் கையாள எளிதாக, விரும்பி வாங்கப்படுகின்றன கிண்டில் போலும் கருவிகள்! ஈ.புத்தகங்கள் எனப்படும் எலக்ட்ரானிக் புத்தகங்கள் மாறும் உலகின் அடையாளம் ஆகிவிட்டன. விக்கிபீடியா போன்ற தமிழ் வளர்க்கும் களஞ்சியங்கள் இணைய வெளியெங்கும் சுடர்விடத்தொடங்கின. தமிழுக்கென எழுத்துருக்கள், பிழைத்திருத்தி என இளந்தமிழ் குழாம் நாளும் பல நவீன அணிகளை பூட்டி அழகுப்பார்க்கின்றன. இதுவன்றி தேய்பிறை காணத் தொடங்கிய மரபுக்கவிதை வடிவம் பலவும் புதுப்பொலிவு காணத் துணை நிற்கும் அனுபவ ஆசான்களும் இணையத்தையே கையிலெடுத்திருக்கின்றனர்.  நிற்க! இப்படி தமிழை வளர்த்தெடுக்க தோள்கொடுக்க முன்வரும் இணைய உலகுக்கு சமுதாயம் கொடுக்கும் மரியாதை என்ன?? வலைப்பூக்களில் மரபுக்கவிதைகள் பொழிவதைப் போல் ஏன் பல தரமான புதுக்கவிதைகள் வருவதில்லை?? நாவல்களும்  குறைவாக இடம் பெறுகின்றனவே??

     அச்சு ஊடகங்கள் போல் வலைப்பூவில் எழுதித் தொகுக்கப்படும் மின் இலக்கியப் புத்தகங்களுக்கும், கவிதை நூல்களுக்கும் எந்த அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. அவை காகிதப் புத்தகங்களாகவே வெளியிட வேண்டிய நிலை தான் இன்று! அப்போதுதானே விருதுகளை விடுங்கள் குறைந்த பட்ச அங்கீகாரமாவது கிடைக்கும். வெகு சில விதிவிலக்குகள் தவிர்த்து. உலகே காடுகள் நலம் காக்க காகிதம்  குறைத்து மின்மயமாகிக் கொண்டிருக்கிற வேலையில் இலக்கியம் மட்டும் எதிர்த்திசையில் போவதா??

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு இணையப் பல்கலைக்கழகம், பதிவர் விழாவோடு இணைந்து மின் இலக்கியப்போட்டிகள் அறிவித்திருப்பது இணையவானில் தோன்றும் விடியல் எனக் கருதி வரவேற்கும் வேளையில், மின் புத்தகங்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டால், இணையத்தில் தமிழ் வளர்க்கும் இதயங்கள் குளிர்ச்சி பெரும். இருவரிக் கதைகளும் அந்த விருதெனும் மழையால் நாவல்கள் என மீண்டும் துளிர்விடும் இல்லையா!!

மேலும் இன்று இலக்கிய வானில் கோலோச்சும் பலரும் பள்ளிநாட்களில்  கையெழுத்துப்புத்தகம் வெளியிட்ட அனுபவம் உள்ளவர்கள் என்பதையும் மறக்கலாகாது. அதுபோலவே உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தோறும் தமக்கென வலைப்பூக்கள் அமைக்கப் பெற்றால், அங்கே மகரந்தம் சூழ் கொள்ள பின்னாளில் பல நறும் தமிழ்க்கனிகள் விளையக்கூடும். அங்கே  சிறுகூட்டுப்புழுக்கள் தமிழ் உண்டு, தமிழ் உண்டு பின் தமிழ் வானில் வண்ணத்துப்பூச்சியாய் வலம்வருமே!! இவ்விரு தீர்வுகளையும் உங்கள் முன்வைத்து, தமிழை வாழ்த்துகிறேன்

 பொருப்பிலே பிறந்து, தென்னன்
             புகழிலே வளர்ந்து, சங்கத்(து)
         இருப்பிலே இருந்து வையை
             ஏட்டிலே தவழ்ந்த பேதை
         நெருப்பிலே நின்று, கற்றோர்
             நினைவிலே நடந்(து)ஓர் ஏன
         மருப்பிலே பயின்ற பாவை
             என்று வில்லிபாரததால்* பாடப்பட்ட தமிழ் பாவையே!!!! இன்று இணையத்தில் வளருகின்றாய்!!  இணையத் தமிழே!! இனி நீ சகம் வெல்க!

பட உதவி
google images 

உசாத்துணை

*Poems from Tamil Literature(4)

*ta.wikipedia.org(2)

*www.canterburytamilsociety.org(1)

*www.dinamani.com(3)

 

                             வலைப்பதிவர் திருவிழா-2015


மற்றும்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

நடத்தும்

மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது. (வகை 1)  கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள்

இதற்கு முன் வெளியான படைப்பல்ல, மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.

63 கருத்துகள்:

  1. செம! அப்ப்டிப் போடுங்க! அருமை! அதுவும் மின் புத்தக்ங்களுக்கும் விருதுகள் பரிந்துரைத்தல் அருமை! நல்லதொரு கருத்தை முன் வைத்தமைக்குப் பாராடூகள்! இருவரிடமிருந்தும். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதெல்லாம் இங்கு பதிவாகியுள்ளது குறித்து எங்களுக்கும் மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி...

    வாழ்த்துகள்! வெற்றி பெற...!! போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது..எனலாம்...சபாஷ் சரியான போட்டி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. * நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதெல்லாம் இங்கு பதிவாகியுள்ளது குறித்து எங்களுக்கும் மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி...** great people think alike, do alike என்பார்கள் இல்லையா:))

      போட்டியில் வெல்வது அடுத்த விஷயம், நண்பர்களோடு கலந்துகொள்வது மிகுந்த உற்சாகமாக இருக்கிறது சகாஸ்!! உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!!

      நீக்கு
    2. அதெல்லாம் சரி !! உங்க பதிவு எங்க மக்களே!! நீங்களும் எழுதி நம் வலைப்பதிவர் திருவிழாவிற்கு மெருகூட்டி, துணை நிற்கவேண்டாமா??? உரிமையாய் கேட்கிறேன் விரைவில் போட்டியில் கலந்துகொள்ளுங்கள் சகாஸ்!

      நீக்கு

  2. மிக நல்ல ஐடியா ஆனால் அப்படி மாணவர்களை செய்யவைப்பது உங்களைப் போன்ற ஆசிரியர்களால் முடியும். அதற்கான வழிகளை மது மூலம் நீங்கள் செய்ய துவங்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஐடியா எனக்குத் தோன்றியதும் எங்கள் தலைமையாசிரியரிடம் பேசியிருக்கிறேன் சகா. தேர்வு நேரம் என்பதால் களத்தில் இறங்கவில்லை:) செஞ்சிருவோம்!!

      நீக்கு
    2. சார் பாஸ்வர்ட் மறந்துட்டேன் சார்..
      http://kuruvai.blogspot.in/

      நீக்கு
    3. இது நட்டின் ப்ளாக்
      http://uplanderstn.blogspot.in/

      நீக்கு
    4. இது கஸ்தூரியின் மாணவர்களது blog! கஸ்தூரி முயற்சித்து உருவாக்கியது!!

      நீக்கு
  3. ஹைய்யா உங்க பழைய அழகிய பேனர் மீண்டும் அழகாக அலங்கரிக்கிறதே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த டகால்டி தானே வேணாங்கறது:)) g +ல share பண்ணி ஊருக்கே சொல்லிருக்கேன்!! இந்த அழகிய bannerருக்கு நன்றி!! நன்றி!!!

      நீக்கு
  4. ஆஹா தமிழின் வளர்ச்சியைக்கண் முன் கொண்டு வந்துட்டியேப்பா...வெற்றி கிடைக்க வாழ்த்துகள்,....ஹாஹா கூந்தலைப்போல் குறைந்த கதை நகைச்சுவைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால் கடைசிவரை சீரியசாய் எழுத முடிவதேயில்லை:)))) மிக்க நன்றி அக்கா உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு!! உங்களின் அடுத்த படைப்பை எதிர்நோக்குகிறேன்:)

      நீக்கு
  5. ஓ, போட்டிக்கான பதிவா? வெற்றி பெற வாழ்த்துகள்.
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகா! மிக்க நன்றி. நீங்களும் போட்டியில் பங்கெடுக்கலாமே!! வாங்க களத்தில் இறங்குங்க சகோ:)

      நீக்கு
  6. இணையத் தமிழ் வெல்லட்டும்
    வெல்லும்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  7. Great people think alike என்ற சொற்களைப் படித்ததும் மறக்கவே முடியாத ஒரு நிகழ்வு வந்தது. வெனிசூலா அதிபர் சாவேஸ் பற்றி ஃபீடல் காஸ்ட்ரோ எழுதும் போது கூறுவது வித்தியாசமானது. இருவரும் அவ்வப்போது நாட்டுநடப்பினை பேசிக்கொள்வார்களாம். காஸ்ட்ரோ, சாவேஸிடம் அவரது (சாவேஸின்) உடல் நலனில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பதாகவும் கூறுவாராம். ஒரு முறை இவ்வாறு பேசிவிட்டு கடைசியாக நீங்கள் என்ன நூல் படித்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்று காஸ்ட்ரோ கேட்டாராம். சாவேஸ் சொன்ன பதில் காஸ்ட்ரோவிற்கு ஆச்சர்யத்தைத் தந்துவிட்டதாம். ஏனென்றால் இருவரும் ஒரே நூலை (இங்கு இவர் படிப்பதை அங்கு அவர்) படித்துக்கொண்டிருந்தார்களாம். இதுதான் நட்பு என்பது. அன்னியோன்னியம் என்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!! அப்போ எங்கள் நட்பும் அன்னியோன்யம் மிக்கது என்கிறீர்கள் இல்லையா அய்யா!!! கீத்து கேட்டேளா:) மிக்க நன்றி அய்யா!!! அப்புறம் பதிவை பற்றி ஒண்ணுமே சொல்லலியே!!!:(((

      நீக்கு
  8. இணையத்திலேயே இனி தமிழ் வளரும் என்பதை அருமையாக புட்டுப் புட்டு வைத்துள்ளீர்கள் உங்கள் பாணியில் மா வெகு சிறப்பாக வந்துள்ளது அம்மு நன்றி! வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...! கலக்குங்கம்...மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனியாச்செல்லம் வாழ்த்தெல்லாம் இருக்கட்டும்.....உங்கள் புன்னகை எங்கே???? ஒரு ஸ்மைல் கூட இல்லாமல் உங்கள் கமெண்ட்டை என்னால் தாங்க முடியல:((( are u alright dear!!!!!

      நீக்கு
  9. நல்லதொரு சிந்தனை!..

    தமிழ் வாழ்க.. வளர்க!..

    வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  10. நல்ல யோசனைகள்....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. தமிழ்க்கனிகள் விளையவைக்கம் தரமான முயற்சியை அழகாக கட்டுரையாக தந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் குட்டிம்மா. ஆமா இப்ப தான் கவனித்தேன் இங்கும் இருவர் எழுதுகிறீர்களா? ஆத்தி இதில் என்னை விட வயதில் சிறியவர் இருவரும் என்றால் அய் எனக்கு இரண்டு தங்கைகள் (குட்டிம்மாக்கள்) கிடைத்துவிட்டனர். அல்லது எனக்கு இரண்டு ஆசிரயர்கள் கிடைத்துள்ளனர்.ஹஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியலை அக்கா!!! இந்த வலைப்பூவில் நான் மட்டும் தான் எழுதுக்கிறேன்!! கஸ்தூரிரெங்கன் என் கணவர் பெயர். அவர் மலர்த்தரு எனும் வலைப்பூவில் எழுதுகிறார். என் போஸ்டுக்கு போட்டியே இங்கே இல்லை:)) இங்கே நானே செல்ல அக்காவின் தங்கையாக்கும்:)) பதிவை வாழ்த்தியமைக்கு நன்றி அக்கா!!

      நீக்கு
    2. ஆத்தி! அப்படியா சரியா போச்சி நான் கஸ்தூரி உங்கள் தோழி போல ஆதலால் இருவர் சேர்ந்து இங்கு எழுதுவதாக நினைத்திருந்தேன் இதை இங்கு மட்டுமில்லாமல் நேற்று வலைக்குழுவினரடமும் விளக்கம் கேட்டு பிறகே முத்துநிலவன் அண்ணா விளக்கினார். இப்போதே தெளிவு பெற்றேன்.

      நீக்கு
    3. இதையே ஆங்கிலத்தில் சொல்லியிருந்தால் சரிதான் அக்கா! கஸ்தூரி என் friend தான்:)))

      நீக்கு
  12. பள்ளியில் கையெழுத்துப் புத்தகம் வெளியிடுவோர், கூட்டாக வலைப் பதிவு தொடங்கினால்.. ஆஹா எண்ணியதை எழுதி விடும் ஒரு வாய்ப்பாகும் . ட்வீட்டுக்கு கீச்சகம் எனும் மொழிபெயர்ப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா அது மிக நல்ல வாய்ப்பாக அமையும்:)
      **ட்வீட்டுக்கு கீச்சகம் எனும் மொழிபெயர்ப்பு அருமை.** அய்யா , அந்த மொழிபெயர்ப்பை அகசிவப்புத் தமிழ் blog ஞானப்பிரகாசன் சகாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன் அய்யா!! மிக்க நன்றி!!!

      நீக்கு
  13. பதில்கள்
    1. மிக்க நன்றி சார்!! உங்கள் கட்டுரைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!!

      நீக்கு
  14. இணையத் தமிழ் உலகமெலாம் பரவும் வகை செய்தல் தங்களைப்போல உணர்வுமிக்க இளைஞர்கள் கையில்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா தங்கள் கருத்து மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி!!

      நீக்கு
  15. அருமை வெற்றி பெற வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
  16. நடக்கப் போவதை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் :)

    பதிலளிநீக்கு
  17. நல்ல முன்வைப்புகள். விருது & பள்ளிகளிலும் தங்கள் படைப்புகளை வலைப்பூக்கள் மூலம் வெளியிட வாய்ப்பளித்தல். இரண்டுமே சிறப்பு மைதிலி. எழுத்து நடையும் கட்டுரையின் சாராம்சம் அனைத்துமே அருமை. வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது உங்கள் முதல் வருகை!!!எனக்கு மிகவும் மகிழ்ச்சி அம்மா!! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  18. நல்ல கட்டுரை அக்கா.வெற்றி பெற வாழ்த்துக்கள்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அபி:) நீங்களும் பங்கெடுக்கலாமே!!!

      நீக்கு
    2. ஹி!ஹி!! ஹி!!! பெரியவங்க நீங்களாலாம் இருக்கும் போது நான் எப்படி ?(அப்பாடா தப்பிச்சாச்சு....)

      நீக்கு
  19. இணையத் தமிழ் விரும்பிகளுக்கும் எழுத்துப் பிரியர்களுக்கும் தீனி போடும் சிந்தை நிறைவில் அமைந்த கட்டுரை. உற்சாகம் பீரிட்டெழுந்தது வாசித்த ஒவ்வொரு வரியிலும். மிகைப்படுத்துதல் அல்ல.

    மின்னிதழ்களும் நூல்களும் கவனம் பெறவேண்டுமென்பதே எனது விருப்பதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் !! அதுதானே இணைய விரும்பிகளின் விருப்பம்:) மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  20. சிறப்பாக இருக்கிறது;வெற்றி கண்ணில் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  21. ஆகா!... ஆகா!... ஆகா!... என்னவொரு தமிழ்!! என்னவொரு கவித்துவ நடை!!! அசத்தி விட்டீர்கள் சகா!! ஆணையாகச் சொல்கிறேன், படிக்கும்பொழுது பல இடங்களில் புல்லரித்தது! (இப்பொழுது இதைச் சொல்லும்பொழுதும்தான்!). தமிழைப் போற்றும் இப்படிப்பட்ட தங்க வரிகளால் தமிழன்னைக்கு மகுடம் சார்த்த எத்தனை நாளாக வேண்டுதல்? அமர்க்களம்!!!

    நடை மட்டுமில்லை, பதிவின் கருத்தாழமும் அருமை! ஆம்! நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை! என்னதான் ஆனானப்பட்ட இலக்கியப் பெரும்புள்ளிகள் முதல் சராசரி எழுத்தார்வலர்கள் வரை பலரும் இணையத்தில் வலம் வந்தாலும் அச்சு ஊடகங்களுக்கு இருக்கும் மதிப்பும் பரவலும் புகழும் இணையத்தமிழுக்கு இல்லை. பல்லாயிரக்கணக்கானோர் புழங்கும் இடமாக இருந்தாலும் இணையத் தமிழ் உலகம் என்பது ஒரு தனிச்சிறு வட்டமாகவே இன்றும் கருதப்படுகிறது. வெளியுலகின் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டும்தாம் இன்றும் கோலோச்சுகின்றன.

    இந்நிலையை மாற்றத் தாங்கள் எழுப்பியிருக்கும் இந்தப் புது முழக்கம் கண்டிப்பாக வரலாற்று முதன்மைத்தனம் வாய்ந்த ஒன்று!

    அடுத்ததாக, இணையத்தில் சிறுவர்களின் எழுத்தை ஊக்குவிக்கத் தாங்கள் கோரியிருப்பது! நெற்றியடி! எப்படி இப்படியெல்லாம் வழி கண்டுபிடிக்கிறீர்கள்!! அருமை!... அருமை!... அருமை!...

    அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு சேர்க்கக் குழந்தைகளை மீண்டும் கதைநூல்கள் படிக்கத் தூண்ட வேண்டும் என்று எழுதியவன் நான். ஆனால், தாங்கள் அதற்கும் ஒரு படி மேலே போய்க் குழந்தைகளையே எழுத்தாளர்களாக்க அரும்பெரும் வழி ஒன்றை முன்வைத்திருக்கிறீர்கள்! இது மட்டும் இயலுமானால், கண்டிப்பாக அடுத்த தலைமுறை தமிழை மறவாது! எதிர்காலத்திலும் தமிழ் நின்று நிலைத்து நீடிக்க இது ஈடிணையற்ற யோசனை!! இப்படி ஒரு யோசனையை முன்வைத்ததற்கு சக தமிழன் எனும் முறையில் நான் தங்களுக்குச் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

    வலைப்பதிவர் திருவிழாக் குழுவினர் கவனத்துக்கு: நான் மட்டும் இந்தப் போட்டி நடுவர் குழுவில் இருந்திருந்தால் இந்தக் கட்டுரைக்குத்தான் முதல் பரிசை அளித்திருப்பேன்!

    பதிலளிநீக்கு
  22. மின் நூல்களுக்கு அங்கீகாரம் இல்லை என்ற நியாயமான கவலையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த ஆண்டுமுதலாவது, சாஹித்ய அகதெமி போன்ற நிறுவனங்களால், மின்-நூல்களும் அச்சு நூல்களைப் போன்றே பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதே என் விருப்பமும். - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  23. எழுத்தின் மெருகு கருத்தின் தீவிரத்தை வருடிக்கொடுத்துப் போகிறது. பாராட்டுக்கள்.

    தமிழகக் கல்விச்சாலைகள் பல ஆங்கில வலைப்பூக்கள் வைத்திருப்பது நினைவுக்கு வந்து உறுத்துகிறது :-).

    பதிலளிநீக்கு
  24. மின்னூல்களுக்கு அங்கீகாரம் வளரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. அருமை டீச்சர் வெற்றிபெறவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. //தம்மேல் மதம் கொள்ளச்செய்த தீங்கனியாள்!!// ஆஹா! ஆஹா!

    பதிலளிநீக்கு
  27. //அங்கே சிறுகூட்டுப்புழுக்கள் தமிழ் உண்டு, தமிழ் உண்டு பின் தமிழ் வானில் வண்ணத்துப்பூச்சியாய் வலம்வருமே!//
    உங்கள் எழுத்தாக்கத்தைப் பாராட்ட நான் வார்த்தை தேடினால், அவை ஒளிந்து கொண்டு எங்களால் இதைப் பாராட்டும் அளவிற்கு நிற்க முடியுமா என்று கேட்கின்றன..
    பிடியுங்கள் முத்துமாலையை :-)
    மிகப்பிரமாதம் டியர் .. வெற்றி உங்களுக்கே

    பதிலளிநீக்கு
  28. //....வலைப்பூ, முகநூல், கீச்சகம் என மெல்ல அழகிய எழுத்துவட்டம் விரிந்து இன்று கட்செவி வரை...
    கட்செவி??? எதன் கலைச்சொல்?
    விக்கியில் தேடிப்பார்த்தேன். கண் + செவி
    Audio Visual? Multimedia - பல்லூடகம்
    Whatsapp???
    கட்செவி இன்றுதான் கேள்விப் படுகிறேன். இணை ஆங்கில வார்த்தையும் கொடுப்பது புதியவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்குமல்லவா?

    பதிலளிநீக்கு