செவ்வாய், 29 செப்டம்பர், 2015

என் 64 மெய்நிகர் விழுப்புண்கள்!!




விருப்பக்குறிகள் என் வெற்றிப்புள்ளிகள்
வெறுப்புக்குறிகள் என் விழுப்புண்கள்
பகிர்தல்  நிலைதகவல்களோடு
முடிந்து போகின்றன- என்னளவில்

களப்போராட்டங்கள் காயங்கள் அதிகம்
என் போல் மெய்நிகர்
இணையப் போராளியாவதை
உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.
கலாம், சசி பெருமாள், சிவகார்த்திகேயன் என
காலநிலை பொறுத்து மாறும் ஹெஷ்டேக்கில்
சிலம்பம் சுற்றுவது என் வழக்கம்-மேலும்
ஈழம், தமிழ்தேசியம் என இளவட்டக்கல்
தூக்கிய அனுபவங்களும்உண்டு.
சற்றே சூடான அறசீற்றமொன்றின்  காரணமாய்
மூகநூல் கணக்கு முடக்கப்பட்ட நாளுக்குப்பின்
பெற்ற 64ஆம் விழுப்புண் என் பண்பாட்டுப் பற்றுதலை
மடைமாற்றியது  புறத்திலிருந்து அகத்திற்கு
அகப்பாடல்கள் அள்ளிக்குவிகின்றன ஓட்டுகள்
வீரமும், காதலும் தானே தமிழர் போற்றும் பண்பாடு!!
மாண்டுபோன சிசுவின் மார்பில் கீறிப் புதைக்கும்
இல்லை இல்லை விதைக்கும்
வீரம் விளைந்தது எம் தமிழ் மரபு என்றுதான்
தொடங்கினேன் முதல் இற்றையை
என்பது உங்கள் கவனத்திற்கு!!
வீரம் போற்றுதும் !! வீரப்பண்பாடு போற்றுதும்!!

 வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015 க்காகவே எழுதப்பட்டது


வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை


இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.

19 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் வெற்றி பெற...சகோ..

    பதிலளிநீக்கு
  2. அன்புச் சகோதரி,

    ‘என் 57 மெய்நிகர் விழுப்புண்கள்!!’
    வெற்றிப்புள்ளிகளைக் கொண்டு வந்து குவிக்கட்டும்.

    வெற்றிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. வர வர "லைக்" தமிழ் வார்த்தையாகவே ஆயிடுச்சு போல! :)

    கவிதை நல்லாயிருக்கு மைதிலி. அதிகமாக விமர்சிச்சு நடுவர்களை திசை திருப்ப விரும்பாததால் இத்துடன் நிறுத்திக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. சகா உண்மையிலே படிக்க மிக அருமையாக இருந்தது. இரண்டாவது முறையும் படித்தேன் பாரதியார் பாடலை பாடுவது போல அப்படி பாடியபோதும் அருமையாக இருந்தது.பாராட்டுக்கள் சகா

    பதிலளிநீக்கு
  5. சபாஷ்!

    புதுக்கவிதைப் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. வீரம்போற்றுவோம்
    அருமை சகோதரியாரே
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. நல்ல சீற்றம்.,...காட்டாற்று வெள்ளமென ஓடும் வேகம்...நன்று.......

    பதிலளிநீக்கு
  8. நிறை நிலையான கவிதை..

    வெற்றி பெறுதற்கு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. அமுக்குட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  10. //வீரம் விளைந்தது எம் தமிழ் மரபு என்றுதான்
    தொடங்கினேன் முதல் இற்றையை
    என்பது உங்கள் கவனத்திற்கு!!// - செம்மை!... செம்மை!...

    //பெற்ற 64ஆம் விழுப்புண் என் பண்பாட்டுப் பற்றுதலை
    மடைமாற்றியது புறத்திலிருந்து அகத்திற்கு// - உங்களுக்கும் இப்படியோர் அனுபவம் உண்டா?!

    மிக... மிக... மிக அருமையான கவிதை! ஆழமான கருத்துக்கள்! இந்தப் பிரிவின் முதல் பரிசும் தங்களுக்குத்தான் கிடைக்கும் என நினைக்கிறேன்! அச்சார வாழ்த்துக்கள் அன்புடன்!

    பதிலளிநீக்கு
  11. சிந்திக்க வைக்கும் சிறந்த பாவரிகள்
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. வெற்றி உங்களுடையதாகட்டும்....... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. வீரமும், காதலும் தானே தமிழர் போற்றும் பண்பாடு!!
    தெளிந்த உண்மை

    பதிலளிநீக்கு